யானைத் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகளுக்கான நஷ்டஈடுகள் அதிகரிக்கப்பட வேண்டும்; கிழக்கு மாகாண சபையில் மாஹிர் கோரிக்கை

🕔 November 26, 2015
Mahir - 0897
– எம்.எம். ஜபீர் –

யானைத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட உயிர்கள் மற்றும் உடைமைகளுக்கு நஷ்டயீடுகள் அதிகரித்து வழங்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் சபையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்தில் அதிகரித்துவரும் யானைகளின் தொல்லையை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபை அமர்வில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்விடயங்களைக் கூறினார்.

இதன்போது, கிழக்கு மாகாணத்தில் அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் வீடுகளுக்கு சமூகசேவை திணைக்களத்தினால் வழங்கப்படும் நஷ்டயீட்டு தொகையை அதிகரிக்க வேண்டும் என, உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெவ்வை சமர்ப்பித்த தனிநபர் பிரேரணையை வரவேற்பதாகவும் மாஹிர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்;

அனர்த்தங்களினால் முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான நஷ்டஈடு ஒரு லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று தனிநபர் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்படவில்லை. அதற்கான தொகையையும் குறிப்பிட்டு, திருத்தத்தை பிரேரணையில் சேர்க்க வேண்டும்.

அதுமட்டுல்ல யானைகளினால் அண்மையில் சம்மாந்துறை பிரதேசத்தில் பல உயிர்கள் பலியெடுக்கப்பட்டுள்ளதுடன், உடைமைகளும் சேதமாக்கப்பட்டுள்ளன. எனவே இந்த யானை பிராச்சினையால் ஏற்படுகின்ற பாதிப்புக்களுக்கும் உரிய நிவாரணத்தினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களின் குடியிருப்பு பிரதேசங்களில் நள்ளிரவு வேளைகளில் புகுந்து மக்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் யானைகளை பாதுகாக்கும் நோக்குடன் மாத்திரமே வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் செயற்படுகின்றார்ள். ஆனால், பொது மக்களை பாதுகாப்பதற்கு எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அண்மையில் இடம்பெற்ற மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் 04 ஆயிரம் மில்லியன் ரூபா யானைகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் யானைகளினால் ஏற்படும் பிரச்சினைகளை தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசாங்கத்துடன் இணைந்து, மாகாண சபையும் ஒரு பொறிமுறையை கொண்டு வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்