வினாத்தாளில் குளறுபடி; ஆசிரியர், மாணவர்கள் புகார்
– க.கிஷாந்தன் –
மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் மூன்றாம் தவணை பரீட்சைக்காக, தரம் 10ற்கு அச்சிட்டு வெளியிடப்பட்ட வரலாறு பாட வினாத்தாளில் குளறுபடிகள் காணப்பட்டதாக ஆசிரியர்களும், மாணவர்களும் புகார் தெரிவிக்கின்றனர்.
மத்திய மாகாண கல்வித் திணைக்களத்துக்கு உட்பட்ட பாடசாலைகளில், நேற்று புதன்கிழமை இடம் பெற்ற வரலாறு பாடப்பரீட்சையின் போது, மாணவர்களுக்கு வழங்கபட்ட வினாத்தாளில் குளறுபடிகள் காணப்பட்டதாகத் தெரிவிக்கபடுகிறது.
குறித்த வினாத்தாளில் வழங்கபட்டுள்ள அறிவுறுத்தல்களின் பிரகாரம், அந்த வினாப்பத்திரம் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளதாகவும், முதலாம் பகுதியில் முதலாவது வினாவிற்கும், இரண்டாம் பகுதியில் 05 வினாக்களுக்கும் விடையளிக்குமாறு மொத்தம் 06 வினாக்களுக்கு விடையளிக்குமாறு மாணவர்களுக்கு வழங்பட்டுள்ள வினாத்தாளில் அச்சிடப்பட்டிருந்தது.
ஆனால் மூன்றாம் பகுதியில் எவ்வித கேள்விகளும் தெரிவுசெய்யுமாறு அச்சிடப்படவில்லையெனவும், மூன்றாம் பகுதியில் 09 ஆவது வினாவில் இரண்டு உப வினாக்கள் மாத்திரம் அச்சிடப்பட்டிருந்ததோடு, 10ஆவது வினா முழுமையாக அச்சிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதேவேளை, வினாத்தாளில் வழங்கபட்டுள்ள அறிவுறுத்தல்களும் பிழையானவை என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த குற்றசாட்டு குறித்து மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் மேலதிக கல்விப் பணிப்பாளரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது – அது பயனளிக்கவில்லை.