கிழக்கு மாகாண ஆசிரியர்களின் சம்பள நிலுவையைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை
கிழக்கு மாகாண ஆசிரியர்களின் பதவியுயர்வின் பொருட்டு வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவையை உடன் பெற்றுத்தர, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் மூதூர் கிளை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில், மேற்படி கிளையினால் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டுக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இலங்கை ஆசிரியர் சேவை பிரமாண குறிப்பு 23.10.2014 ஆம் திகதி 1885-38ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பின் பிரகாரம், கல்வி அமைச்சின் செயலாளரின் 10.11.2014 ஆம் திகதி 35-2014 ஆம் இலக்க சுற்றரிக்கையின் படி, நாடு பூராகவும் ஆசிரியர் பதவியுர்வு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
குறிப்பாக, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் 17 கல்வி வலயங்களில் ஆசிரியர் பதவியுயர்வு, உள்ளீர்ப்பு, சம்பள மாற்றம் தொடர்பில் 18,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பதவியுயர்வின் பொருட்டு வழங்கப்பட வேண்டிய நிலுவைகள் காலதாமதமாகி வருவது கவலைக்குரிய விடயமாகும்.
அந்த வகையில், கிழக்கு மாகாணத்தில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றி வரும் அதிபர், ஆசிரியர்களின் சம்பள நிலுவைக்கென சுமார் 160 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுகின்றது. இந்நிதியினை கல்வி அமைச்சை தொடர்பு கொண்டு பெற்று, மாகாண கல்வி திணைக்களத்தின் ஊடாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.