தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், அறிஞர் ஜெமீல் நினைவு நிகழ்வு

🕔 November 5, 2015

SHM. Jameel - SEUSL - 03
– எம்.வை. அமீர் –

முதுபெரும் கல்விமானும் பன்னூலாசிரியரும்,சிறந்த ஆய்வாளரும் சமூக சிந்தனையாளருமான மறைந்த மர்ஹும் எஸ்.எச்.எம்.ஜெமீல் தொடர்பான நினைவுப் பேருரையும், அவரின் ஆக்கங்கள் அடங்கிய புத்தக கண்காட்சியும், அவர் சேகரித்த நாட்டார் பாடல்கள்  அடங்கிய இணையத்தள ஆரம்பம் ஆகியவற்றினை உள்ளடக்கிய நிகழ்வொன்று நேற்று புதன்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கை அரபுமொழி பீடத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வுகளில், மர்ஹும் எஸ்.எச்.எம்.ஜெமீலின் மனைவி மகன் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் கல்வியலாளர்கள் அவரது நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கை அரபுமொழி பீடத்தின் பீடாதிபதி அஷ்ஷேய்க் எஸ்.எம்.எம். மசாகிர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

அறிஞர் எஸ்.எச்.எம். ஜெமீல் பற்றிய நினைவுரையை பேராதனை பல்கலைக்கழக முன்னாள் மெய்யியல்துறை பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் ஆற்றினார். நிகழ்வு பற்றிய அறிமுக உரையை முதுநிலை விரிவுரையாளர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் நிகழ்த்தினார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக அஷ்ரப் ஞாபகார்த்த நூலகத்தில், மர்ஹும் எஸ்.எச்.எம். ஜெமீல் எழுதிய மற்றும் அவருடன் தொடர்புடைய நூல்களளின் கண்காட்சியை அன்னாரின் மகன் நஸீல் ஆரம்பித்து வைத்தார்.

மர்ஹும் ஜெமீல் திரட்டிய நாட்டார் பாடல்கள் அடங்கிய இணையத்தளத்தை உபவேந்தர் எம்.எம்.எம். நாஜிம் ஆரம்பித்து வைத்தார்.SHM. Jameel - SEUSL - 01SHM. Jameel - SEUSL - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்