‘அகர ஆயுதம்’ கலை இலக்கிய அமர்வின் ஆறாவது சந்திப்பு
-எம்.வை.அமீர் –
‘அகர ஆயுதம்’ கலை இலக்கிய சந்திப்பிற்கும் உரையாடலுக்குமான பொது வெளி தொடர் அமர்வின் 06 ஆவது சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழம நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் பாடசாலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தென்கிழக்கின் நாட்டார் இலக்கியங்களுக்கு அதிகளவில் பங்களிப்பு செய்திருக்கும் கவிஞர். சட்டத்தரணி எஸ். முத்துமீரான் முன்னிலையில், ஆசுகவி அன்புடீன் அவர்களின் தலைமையில் நேற்றை அகர ஆயுதம் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதம பொறியியலாளர் கவிஞர் தம்பிலெப்பை இஸ்மாயில் கலந்து சிறப்பித்தார்.
நிகழ்வில், ஆசுகவி அன்புடீன் தலைமையுரையாற்ற, அகர ஆயுதத்தின் அறிமுகத்தையும் வரவேற்று உரையினையும் பிரதான செயற்பாட்டாளர் கிராமத்தான் கலீபா நிகழ்த்தினார். கிராமிய இலக்கியங்கள் மற்றும் நாட்டார் இலக்கியங்கள் குறித்த ஒப்பீட்டாய்வு உரைகளை வளவாளர்களான சிராஜ் மசூர், ஏ.பீ.எம். இத்ரீஸ் மற்றும் ஏ.எம். சாஜித் ஆகியோர் நிகழ்த்தினர்.
நிகழ்வின் சிறப்பம்சமாக ‘வடக்கு வாகனம்’ எனும் தொனிப்பொருளில், வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 இளம் கலை இலக்கியவாதிகள், தங்கள் பிராந்திய உணர்வுகளைச் சித்தரிக்கும் இலக்கியங்களை வெளிப்படுத்தினர்.
‘வடக்கு வாகனத்தின்’ இலக்கிய குழுவின் சார்பாக கவிஞர்களான யோ. புரட்சி, முல்லைத்தீபன், தர்ஷினி, பிரதீப், வேதிகா, அரவிந்த் மற்றும் காவலூர் அகிலன் ஆகியோர் கவிதை வாசித்தனர்
இலக்கியம் தாண்டி இறுக்கமான தமிழ் – முஸ்லிம் உறவின் அவசியமும் பொதுவெளியில் உரையாடப்பட்டது. ‘வடக்கு வாகனம்’ குழவினருக்கு கனேடிய ‘படைப்பாளிகள் உலகம்’ இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் கவிஞர் யோ.புரட்சி மற்றும் கவிஞர் முல்லைத்தீபன் ஆகியோர் தலைமையேற்று வருகை தந்திருந்தனர்.
இந் நிகழ்வில், கிராமிய மணம் கமழும் கவிதை வெளிப்பாடுகள், சிறப்புரைகள், நாட்டாரியல் இலக்கியம் சார்ந்த பாரம்பரிய கலை வடிவங்களுடன் அதனை அடுத்த தளத்துக்கு நகர்த்துகிற முன்னெடுப்புகள் பற்றிய உரையாடலும் இடம்பெற்றது. மேலும், எழுத்தாளர்களிடமிருந்து புத்தகங்கள் சேகரிக்கும் பணியும் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இறக்காமம் சமூக்கூன் அண்ணாவியாரின் தலைமையிலான மாணவர் குழுவினரால் நிகழ்த்தப்பட்ட, பொல்லடி- களிகம்பு ஆட்டமும் இங்கு அரங்கேற்றப்பட்டது.