புகையிரத நிலையங்களில் யாசகம் கேட்பதற்கு இன்று முதல் தடை; மீறுவோர் கைதாவர்
புகையிரதங்களிலும் நாடளாவிய ரீதியிலுள்ள புகையிரத நிலையங்களிலும் யாசகம் கேட்பதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி யாசகத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று புகையிரதத் திணைக்களத்தின் திட்டமிடல் பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.
புகையிரத பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் ,அவர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை தவிர்ப்பதற்காவுமே, இவ்வாறான நடவடிக்கையினை இன்று முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில் யாசகர்களின் தொல்லைகள் அதிகரித்துள்ளன.
குறிப்பாக புகையிரதம் மற்றும் புகையிரத நிலையங்களில் யாசகம் செய்வதால் பயணிகள் பலர் சிரமங்களை எதிர்நோக்குவதுடன் யாசகர்கள் என்ற போர்வையில் கொள்ளைச் சம்பவங்களும் இடம்பெறுகின்றனர். எனவே இவற்றை கட்டுப்படுத்தி பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு எமக்குள்ளது.
குறிப்பாக புகையிரதங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பயணிக்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் புகையிரதங்களையும் மற்றும் புகையிரத நிலையங்களின் சுற்றுச் சூழலையும் அழகாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும். இதற்கு யாசகர்கள் பெரும் தடையாக இருக்கின்றனர். ஆகையால்தான் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்.
யாசகர்களின் தொல்லையை கட்டுப்படுத்த புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பொலிஸாருடன் இணைந்து விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். குறிப்பாக புகையிரதங்களில் மற்றும் புகையிரத நிலையங்களில் யாசகம் செய்வோரை கைது செய்து நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தபடுமெனவும் அவர் குறிப்பிட்டார்.