மீள்குடியேறும் முஸ்லிம் மக்கள் அச்சுறுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது; வட மாகாண சபை உறுப்பினர் யாசீன் ஜவாஹிர்

🕔 October 24, 2015
Jawahir - 01– பாறுக் ஷிஹான் –

முல்லைத்தீவு முறிப்பில் முஸ்லிம் மக்களை  அச்சுறுத்த எவருக்கும் இடமளிக்க முடியாது என,   வட மாகாண சபை உறுப்பினர்  யாசீன் ஜவாஹிர் (ஜனுபர்) தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு காரைத்துறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குமிழமுனையில் தற்போது முஸ்லிம்கள் மீள் குடியேறி வருகின்ற நிலையில்,  தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற
உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் பே௱ன்றவர்கள் ஊடகங்களை பயன்படுத்தி அபாண்டமா ன குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலையிலேயே,  வட மாகாண சபை உறுப்பினர்  யாசீன் ஜவாஹிர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ் விவகாரம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;

மேற்படி   முஸ்லிம் மக்கள் 1990 ஆண்டு வெளியேற்றப்பட்ட பின்னர், நீண்டகால இடைவெளியின் பிறகு தங்களது சொந்த இடத்தில் தற்போது குடியேறியுள்ளனர். இதேவேளை, இவர்கள் மீள்குடியேறும் போது பல சவால்களை எதிர்நோக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அரசியல்வாதிகள் சிலரது  செயப்பாடுகள் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்ற வகையிலான பயங்கரவாத செயப்பாடாக உள்ளது.
நான் முல்லைத்தீவு மண்ணில் பிறந்தவன். மக்கள் பிரதிநிதி என்ற வகையில், இந்த மக்கள் சொந்த இடத்திலேதான் குடியேறுகின்றனர்  என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். இதற்காக அவர்கள் மிகப்பொரும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.

1982 மற்றும் 1984 ஆண்டுகளில் முறிப்பு, நாகஞ்சோலை மற்றும் கொத்தியா கும்பம் போன்ற பகுதிகளிலுள்ள காணிகளுக்குஅரசினால்  அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு, அப்பகுதி முஸ்லிம் மக்களுக்கு உரித்தாக்கப்பட்டது. ஆனால் சில ஊடகங்கள், வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரனது கருத்தினை மையப்படுத்தி, மீள்குடியேறிய அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு தேவையற்ற பட்டங்களை வழங்கி, அவர்களை அச்சுறுத்தி வெளியேற்ற முனைகின்றன.

மேற்படி முஸ்லிம் மக்கள் காடுகளை அழிக்கின்றனர் என்று, சில ஊடகங்கள் தெரிவித்திருப்பது அவற்றின் அறியாமையாகும். பல வருடகாலமாக ஓர் இடம் பராமரிப்பின்றிக் கிடந்தால் அந்த இடம் எப்படி இருக்கும் என்பதை யாவரும் அறிவர். மீள்குடியேறிய அப்பகுதி மக்கள், தங்களது சொந்த காணிகளில் வளர்ந்திருந்த பற்றைக்காடுகளைத்தான் அகற்றினார்கள். பாரிய மரங்களைகளையோ, காடுகளையோ அவர்கள் அழிக்கவில்லை.

இதனுடன் மற்றுமொரு குற்றச்சாட்டும் உள்ளது. இக்குடியேற்றத்தின் பின்னால் எமது தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை முற்றாக நான் மறுக்கின்றேன்.

மீள்குடியேறிய மேற்படி முஸ்லிம் மக்கள், தமக்குக் கிடைக்கப் பெற்ற ஸகாத் (இஸ்லாமிய ரீதியில் ஏழைகளுக்கு வழங்கப்படும் பணம் அல்லது சொத்து) பணத்திலேதான் தங்களின் காணிகளை துப்பரவு செய்கின்றனர்.

இதனை ஏன் இவர்கள் தடுக்க முற்படுகின்றனர் என கேட்க விரும்புகின்றேன். ஊடகங்கள் இவ்விடயத்தில் பொறுப்புணர்வுடன் நடக்க முன்வரவேண்டும். தமிழ் – முஸ்லிம் இன நல்லுறவை சீர்குலைக்க முற்படக் கூடாது. 2009 ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் 1000 குடும்பங்களாக இருந்த குடும்பங்கள் 4000 குடும்பங்களாக பெருகியுள்ளன. ஆனால் அவர்கள் தேவையற்ற காணிகளை அழிக்க முற்படவில்லை. தங்களது சொந்த காணிகளையே பொறுப்பெடுத்து சுத்தம் செய்கின்றனர்.

இதனை பலரும் முள்ளியவளை என தெரிவித்து, முறிப்பு பிரதேசத்தை மறைக்க முற்படுவது வேதனை தருகின்றது. ஊடகங்கள் சிலவும் இதனை திரிவு படுத்தியுள்ளன. இதனை அவர்கள் கைவிட முன்வர வேண்டும். அம்மக்களை அரவணைக்க வேண்டும்” என்றார்.Murippu - 03Murippu - 04Murippu - 02Murippu - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்