மியன்மாரின் ‘நர வேட்டை’க்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்; தூதரகம் முன்பாக அந்நாட்டு தேசியக் கொடியும் எரிப்பு
🕔 May 29, 2015
– அஸ்ரப் ஏ. சமத் –
மியன்மார் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் கொடூரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலான – கண்டனப் பேரணியொன்று, இன்று வெள்ளிக்கிழமை – கொழும்பில் நடைபெற்றது.
ஐக்கிய சமாதான இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்தப் பேரணியானது, ஜூம்ஆத் தொழுகையின் பின்னர், கொழும்பு தெவட்டகஹ பள்ளி வாசலுக்கு முன்பாக ஆரம்பித்து, ரொஸ்மிட் பிலேசில் அமைந்துள்ள மியன்மார் தூதுரகம் வரை சென்றது.
இதன்போது, அப்பாவி மக்களை கொன்று குவிப்பதை உடனடியாக நிறுத்துமாறு கோரும் கடிதமொன்றினை – ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மியன்மார் தூதரகத்தில் கையளித்தனர்.
இதேவேளை, மியன்மார் தூதரகத்துக்கு முன்பாக, அந்நாட்டுக் கொடியை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்ததோடு, பாதிப்புக்குள்ளாகி வரும் மியன்மார் மக்களுக்காக ‘துஆ’ப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் – அமைச்சர் றிசாத் பதியுத்தீன், மேல்மாகாண சபை உறுப்பினர்கள் முஜிபுர் ரஹ்மான், பைரரூஸ் ஹாஜி மற்றும் தேசிய ஜக்கிய முன்னனியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ஆசாத் சாலி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.