ஆபத்தான கற்குவாரியின் அனுமதி ரத்து

🕔 October 5, 2015

Kottagella - 01
– க. கிஷாந்தன் –

தி
ம்புள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தை அண்மித்த மலைப்பகுதியிலுள்ள, கற்குவாரியின் அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கற்குவாரியினால், அருகிலிருக்கும் தோட்ட உதவி கண்காணிப்பாளரின் இல்லம் மற்றும் தவறணை ஆகிவற்றுக்கு ஏற்படவுள்ள ஆபத்துக்கள் குறித்து, சுட்டிக்காட்டப்பட்டமையினை அடுத்து, மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது, குறித்த கற்குவாரிக்கான அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது;

மேற்படி மலைப்பகுதியில் அமைந்துள்ள கற்குவாரியினால் தோட்ட உதவி கண்காணிப்பாளரின் உத்தியோகபூர்வ இல்லம் அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளது.

மேலும், கற்குவாரியினால், அருகிலுள்ள தவறனையும் ஆபத்தினை எதிர்நோக்கியுள்ளது. இதனால், அங்கு பணியாற்றும் ஊழியர்களை  தற்காலிகமாக பணியில் ஈடுபட வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கற்குவாரியில் வெடி வைத்து கற்பாறைகள் தகர்க்கப்படும் போது, கற்கள் சிதறி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள தோட்ட உதவி கண்காணிப்பாளரின் இல்லம் மற்றும் தவறனையில் விழுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. மேலும், மலையில் வெடிப்புகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த கற்குவாரியின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்யுமாறு தோட்ட உதவி கண்காணிப்பாளர் கோரிக்கை விடுத்திருந்தார். இதனை கருத்திற் கொண்ட மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது, குறித்த கற்குவாரிக்கான அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த பிரதேசத்தில் ஆய்வுகளை முன்னெடுத்த மத்திய சுற்றாடல் அதிகார மற்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள், கற்குவாரியின் செயற்பாடுகளால் ஆபத்து இருப்பதை உறுதி செய்திருந்தனர்.

கற்குவாரி அமைந்துள்ள மலையின் அடிவாரத்திலேயே கொட்டகலை மேபீல்ட் தோட்டம் உள்ளிட்ட பல தோட்டங்களுக்கு செல்வதற்கான பிரதான வீதியும் அமைந்துள்ளது.

இவற்றினைக் கருத்திற்கொண்டு, பல்வேறு ஆபத்துகளையும் தடுக்கும் வகையில், கற்குவாரியின் அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, திம்புளை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கூறினார்.Kottagella - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்