அம்பாறையில் வீடமைப்புக் கடன் வழங்கும் நிகழ்வு; அமைச்சர் சஜித் பங்கேற்கிறார்
– அஸ்ரப் ஏ. சமத் –
அம்பாறை மாவட்டத்திலுள்ள மூவினங்களையும் சேர்ந்த 1200 குடும்பங்களுக்கு, சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச, நாளை சனிக்கிமை – வீடமைப்புக் கடன்களை வழங்கி வைக்கவுள்ளார்.
அம்பாறை நகர மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ, மேற்படி கடன்களை பயனாளிகளுக்கு வழங்கி வைப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நாடு முழுவதிலும் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ், குடும்பமொன்றுக்கு தலா ஒரு லட்சம் ரூபாவினை, சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு – கடனாக வழங்கி வருகிறது. இதற்கிணங்கவே, நாளைய தினம் – அம்பாறை மாவட்டத்திலும் வீடமைப்புக் கடன் வழங்கப்படுகிறது.
அம்பாறை நகர மண்டபத்தில் நாளை நடைபெறும் நிகழ்வில், 30 குடும்பங்களுக்கு வீட்டுரிமைப் பத்திரமும் வழங்கப்படவுள்ளன.
சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ். அமீரலியும்
இந் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.
இதேவேளை, மொனராகல மாவட்டத்தைச் சேர்ந்த 850 குடும்பங்களுக்கும் – நாளை சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு, அமைச்சர் சஜித் பிரேமதாஸ வீட்டுக்கடன்களை வழங்கி வைக்கவுள்ளார்.