தீவுப்பிட்டியில் அரச ஊழியருக்கு காணி பெற முடியுமென்றால், அங்கு வாழ்ந்த மக்களுக்கு ஏன் முடியாது: றிப்கான் கேள்வி

🕔 March 18, 2019
“நானாட்டான், தீவுப்பிட்டி கிராமத்தில் பிரதேச செயலக ஊழியருக்கு காணி பெற்றுக்கொள்ள முடியுமென்றால், பாரம்பரியமாக அங்கு வாழ்ந்து வரும் மக்களுக்கு காணிகளுக்கான உரிமத்தை பெற்றுக்கொடுக்க ஏன் முட்டுக்கட்டை போடப்படுகின்றது” என்று வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் கேள்வியெழுப்பினார்.

25 வருடங்களுக்கு மேலாக தீவுப்பிட்டியில் வாழ்ந்து வரும் மக்களை வெளியேறுமாறும், அந்தக் காணிகள் அரச காணிகள் என்றும் அதிகாரிகள் கூறுகின்றமை தொடர்பிலும்,  எழுந்துள்ள பிரச்சினையை அடுத்து, முருங்கன் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கான விசாரணை இன்று திங்கட்கிழமை அங்கு நடைபெற்றது.

இதன்போது அரச அதிகாரிகள் தங்களை அந்த பிரதேசத்திலிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்துவதாக கிராமத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் பொலிஸில் தெரிவித்தனர்.

பொலிஸ் நிலையத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் பிரத்தியேக செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ரிப்கான் பதியுதீன், மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் ஆகியோரும் சமூகமளித்து மக்கள் சார்பில் குரல்கொடுத்தனர்.

விசாரணைகளின் போது மன்னார் பிரதேச செயலகத்திலிருந்து வருகை தந்த அதிகாரி ஒருவர் தமக்கும் அங்கு உரித்தான காணி இருப்பதாக தெரிவித்த போதே, அதிகாரிகள் காணிகளை பெற்றுக்கொள்ள முடியுமானால் அப்பாவி மக்களுக்கு ஏன் தடை போடுகின்றீர்கள்? என ரிப்கான் பதியுதீன் கேள்வியெழுப்பினார்.

மக்களை வேண்டுமென்று அதிகாரிகள் அச்சுறுத்திக்கொண்டிருப்பதை கைவிட வேண்டும் எனவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் சுமூக வாழ்வுக்கு உதவ வேண்டும் எனவும் இதன்போது அவர் வலியுறுத்தினார்.

இந்த விசாரணையின் பின்னர் குறித்த பிரச்சினையை பிரதேச செயலாளருடன்  மீண்டும் ஒரு தடவை பேசி, தீவுப்பிட்டி மக்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கும் வகையில் சமரசமான தீர்வொன்றை மேற்கொள்வதென அங்கு முடிவு செய்யப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்