பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, நரியுடன் ஒப்பிட்டு விக்னேஸ்வரன் கருத்து

🕔 February 17, 2019

ர்வதேச சமூகத்தின் உதவியுடன் போர்க் குற்ற விசாரணை நடத்துங்கள். அதன் பின்பு மன்னிப்புப் பற்றி ஆராய்வோம் என ரணிலின் கருத்துக்கு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

“உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் உண்மையை பேசி, கவலையை வெளியிட்டு மன்னிப்பை கோரி முன்னோக்கி செல்ல வேண்டும்” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவரின் கருத்து தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

“பழையனவற்றை மறந்து விடுங்கள். உண்மையைக் கண்டறிய முனையாதீர்கள். அப்படிக் காண விழைந்தால் உங்களின் இளைஞர்கள் செய்த குற்றங்களும் அம்பலத்திற்கு வந்துவிடும். அது வேண்டாம். மறந்து விடுவோம். மன்னித்து விடுவோம்” என்று ரணில் கூறியுள்ளார்.

“அதாவது உங்களுக்கு நாங்கள் வடகிழக்கு இணைப்பைத் தருகின்றோம். உங்கள் தாயகத்தில் சுயாட்சியைத் தருகின்றோம். சமஸ்டி ரீதியிலான ஒரு அரசை உங்களுக்கு வழங்குகின்றோம்.”

“பதிலுக்கு நீங்கள் மறந்து விடுங்கள், மன்னித்து விடுங்கள் என்று அவர் கூறவில்லை. மாறாக உங்களுக்குப் பணம் தருகின்றோம். உங்கள் உறுப்பினர்களுக்கு சலுகைகள் தருகின்றோம். உங்கள் பொருளாதார விருத்திக்கு அடி சமைக்கின்றோம். நடந்து போனதை மறந்து விடுங்கள். மன்னித்து விடுங்கள் என்றுதான் கூறுகின்றார்” என்றும் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்

மன்னித்து விடுங்கள் என்று ரணில் கூறியதன் அர்த்தம் என்ன?

“ஜெனிவாவில் கேள்வி கேட்கப் போகின்றார்கள். நாம் செய்வதாகக் கூறியவற்றை இதுகாறும் செய்யவில்லை. இப்போது உங்களுக்கு சலுகைகளைக் கொடுக்க எண்ணியுள்ளோம். கட்சி ரீதியாக அதைச் செய்ய எண்ணியுள்ளோம். ஏற்றுக்கொண்டு உங்கள் உரிமைகளைக் கேளாதீர்கள், உரித்துக்களை நிலைநாட்டப் பார்க்காதீர்கள். தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள ஏகாதிபத்தியங்கள் தொடர்ந்து நிலைக்கச் செய்ய உங்களின் ஒத்துழைப்பை நல்குங்கள்.

ஜெனிவாவில் மீண்டும் கால அவகாசம் பெற்றுக் கொடுங்கள்” என்று கூறிச் சென்றுள்ளார் ரணில் விக்கிரமசிங்க.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மௌனம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனமாகத் தலையசைத்ததைப் பார்த்தால் அதற்கு அவர்கள் தயாராகி விட்டதுபோலத் தெரிகின்றது.

எமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம் என்று, அவர்கள் கூறுவது போலத் தெரிகிறது.

துரையப்பா, குமார சூரியர், டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் இதைத்தானே கூறினார்கள். அரசாங்கத்திடம் இருந்து பணத்தைக் கறந்து பதவிகளைப் பெற்று பொருளாதார விருத்தியை உறுதி செய்து எமது நிலையைச் சீர்செய்வோம். உரிமைகளையும் உரித்துக்களையும் மறந்துவிடுவோம் என்று அவர்கள் கூறியபோது நாங்கள் என்ன கூறினோம்? அவர்களைத் “தமிழினத் துரோகிகள்” என்றோம். அவர்களைக் கடையவர்களில் கடையவர்களாக அடையாளம் காட்டினோம், சித்திரித்தோம்.

இன்று என்ன நடந்துள்ளது? அவர்களுக்கு அரசாங்கம் உதவிகள் கொடுத்தால் அவர்கள் துரோகிகள். எங்களுக்கு அவ்வாறு உதவிகள் கிடைத்தால் அது எமது மேலாண்மைத் திறன்; எங்கள் புத்திக் கூர்மையின் வெளிப்பாடு; தந்திரோபாயத் திறமை. இங்கு எமது மக்களின் வருங்காலம் பற்றிய சிந்தனைகள் அடிபட்டுப் போகின்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அரசாங்கத்திற்குக் கூறுவது என்ன?

நாங்கள் எங்கள் மக்களுக்கு உங்கள் பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற்றுவிடுவோம். அதாவது எம் மக்களுக்கு லஞ்சம் கொடுத்து அவர்களை வாங்கிவிடுவோம். அதற்கென்ன? நாங்கள் ஜெனிவாவில் கால அவகாசம் பெற்றுத் தருவோம்.

பௌத்தத்திற்கு வடகிழக்கில் முதலிடம் அளிப்போம். வடகிழக்கை இணைக்காது வைத்திருக்க எமது பூரண சம்மதம் தெரிவிப்போம். சமஸ்டி கேட்க மாட்டோம். உள்நாட்டு சுயாட்சியைக் கேட்க மாட்டோம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களைத் “துரோகிகள்” என்று பச்சை குத்தி கழுதைகள் மேலேற்றி வலம் வரச் செய்வோம் என்றுதான் கூறாமல் கூறுகின்றார்கள்.

இந்த விதமான நடவடிக்கைகள் எங்களை எங்கே கொண்டு செல்லப் போகின்றன? அரசாங்கப் பணம் பெறுபவர்கள் தம்மை நன்றாகக் கவனித்துக் கொள்வார்கள். தமது உற்றார் உறவினர்களை நன்றாகக் கவனித்துக் கொள்வார். பத்து வருடங்களில் வடகிழக்கு சிங்கள, பௌத்தப் பிரதேசமாக மாறும். மன்னிப்பின் மகத்துவம் இதுதான்.

ரணிலை நரியுடன் ஒப்பிட்ட விக்னேஸ்வரன்

நரி வந்து புள்ளிமானிடம் கூறுகின்றது. உன் மகனைக் கொன்று உண்டவன் நான்தான். மன்னித்துவிடு. இனி நாங்கள் நண்பர்களாக இருப்போம். உன் மற்றைய குட்டிகளையும் என்னிடம் அனுப்பு. நான் அவற்றிற்குப் பொறுப்பு. அவற்றையும் நான் கொன்று சாப்பிட்டால் மீண்டும் உன்னிடம் மன்னிப்புக் கேட்பேன். வருத்தப்படாதே. உன்னையும் உன் குட்டிகளையும் என் பிரதேசத்தினுள் வேண்டுவது போல என் கட்டுப்பாட்டில் உலாவிவர நான் உனக்கு பூரண உரித்துத் தருகின்றேன் என்று கூறுகிறது.

உண்மையைக் கண்டறியவிடாமல் பிரதம மந்திரி அவர்கள் தடுப்பது எமது உரிமைகளை மறுப்பதற்காக. எமக்குள்ள உரித்துகளை மறைப்பதற்காக. உலக நாடுகளின் பார்வை உண்மையைக் கண்டறிந்து விடும் என்ற பயத்தினால். இதற்குத் துணைபோகத் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் துணிந்து விட்டார்கள்.

இதுகாறும் எம் மக்கள் பட்ட பாட்டை மறந்து ஆயுதமேந்த வேண்டிய காரணத்தை மறந்து, உயிர்த் தியாகங்கள் செய்ததை மறந்து, பிச்சைப் பாத்திரம் ஏந்தி, பிச்சை எடுத்து எம்மக்களுக்குப் பிச்சைபோட முன்வந்துள்ளார்கள்.

சர்வதேச விசாரணை

எம்மவர் குற்றங்களும் வெளிவந்துவிடுவன என்று மிரட்டுகிறார் பிரதமர். குற்றம் செய்யாத பலரை சிறைகளில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தீர்கள். எம்மைக் கொன்று குவித்தவர்களை சித்திரவதை செய்தவர்களை இதுவரை அடையாளப்படுத்தாது அவர்களுக்கு மன்னிப்பை வேண்டி நிற்கின்றீர்கள்.

அவ்வாறு செய்தவர்கள் யார் என்பதை முறையாக சர்வதேச விசாரணை மூலமாக முதலில் கண்டறியுங்கள். அதன் பின் மன்னிப்புப் பற்றிக் கதைக்கலாம் என்று பிரதமரிடம் கூற எங்களுள் எவரும் இல்லை.

ஆகவே நாங்கள் அரசாங்கத்திடம் கூறுகின்றோம், சர்வதேச உதவியுடன் போர்க் குற்ற விசாரணை நடத்துங்கள். நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிந்து கொள்வோம். அதன் பின் மன்னிப்புப் பற்றி ஆராய்வோம் என்றார் விக்னேஸ்வரன்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்