மு.காங்கிரஸின் நாவிதன்வெளி முக்கியஸ்தர்கள், மக்கள் காங்கிரஸில் இணைவு

🕔 February 12, 2019

முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேசத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் தொண்டர்களும் இன்று செவ்வாய்கிழமை மாலை  அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து கொண்டனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிசாட் பதியுதீனை கொழும்பில் சந்தித்த அவர்கள், இனி மக்கள் காங்கிரஸில் இணைந்தே தாம் பயணிக்கவுள்ளதாக உறுதி வழங்கினர்.

முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி மத்திய குழுவின் முன்னாள் தலைவர் ஏ.எம். மஹ்ரூப், செயலாளர் இஸட். நிஜாம் உட்பட பிரதேச முக்கியஸ்தர்களான பீ.எம். அமீர், ஏ.ஏ. இஸாக், எம்.எஸ். ஆதம்பாவா, எம்.எல். அஸீஸ் உள்ளிட்ட பலர், இன்று மக்கள் காங்கிரசில் இணைந்துகொண்டனர். இவர்களுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த நாவிதன்வெளி பிரதேச முக்கியஸ்தர் ஏ.பி. மன்சூரும் இணைந்துகொண்டார்.

முஸ்லிம் காங்கிரஸில் இருந்து தாங்கள் வெளியேறி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டமைக்கான காரணம், தாம் அங்கம் வகித்த கட்சி தமது பிரதேசத்தை தொடர்ந்தும் புறக்கணித்தது வந்ததும், தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு நாவிதன்வெளி பிரதேச மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி வந்தமையினால் ஆகும் என அவர்கள் தெரிவித்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம்  காங்கிரஸுக்கு மாற்றீடாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸையே தாங்கள் நோக்குவதாகவும், மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமையை பலப்படுத்தப்போவதாகவும், தமது பிரதேசத்தில் கட்சியின் கட்டமைப்பை உருவாக்கி மேலும் சக்தியூட்டுவதற்கு எண்ணியுள்ளதாகவும் இதன்போது அவர்கள் குறிப்பிட்டனர்.

இனிமேல் தமது பிரதேசத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமையின் ஒத்துழைப்புடன் கட்டியெழுப்ப முடியுமென தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர்.

இந்த நிகழ்வில், கல்முனை மாநகர சபை உறுப்பினர் முபீத், கட்சியின் உயர்பீட உறுப்பினர் சித்தீக் நதீர், கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் முஷார்ரப் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.

(அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்