முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரித்து வழங்குமாறு, ஆளுநர் ஹிஸ்புல்லா உத்தரவு

🕔 February 8, 2019
கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை, 4000 ரூபாவாக உயர்த்தி வழங்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உத்தரவிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் சுமார் 4500பேர், கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சின் நியமனத்துடன் கடமையாற்றி வருகின்றனர்.

இவ் ஆசிரியர்களுக்கு கடந்த 08 வருடங்களுக்கு மேலாக 3000 ரூபாய் வீதம் மாதாந்த சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

இச் சம்பளம் தமக்கு போதாது என்றும், சம்பளத்தை அதிகரித்து வழங்குமாறும் தெரிவித்து, ஆளுநருக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கு அமைவாக திறைசேரி,மாகாண கல்வியமைச்சு , நிதி அமைச்சு போன்றவற்றுடன் ஆளுநர் கலந்துரையாடியதன் பின்னர், அனைவரினதும் இணக்கத்துடன் இவ் ஆசிரியர்களின் மாதாந்த சம்பளத்தினை 4000 ரூபா வரை உயர்த்தி வழங்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண கல்வியமைச்சுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கமைவாக எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் 4000 ரூபாவாக வழங்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட கஸ்டங்களுக்கு மத்தியில் நீண்டதூரம் பயணித்து தங்களது பணிகளை செய்து வரும் ஆசிரியர்களின் வேதனத்தோடு இவர்கள் தொடர்பான இன்னும் பல நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

அத்துடன் மாகாணத்திலுள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கான மேலதிக பயிற்சிகளை வழங்குமாறும் கல்வியமைச்சுக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் பணிப்புரை விடுத்துள்ளார்.

(ஆளுநரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்