ஆளுநர் மாளிகை பராமரிப்புக்கான நிதிதியை, ஏழை மாணவர்களுக்கு வழங்குமாறு ஹிஸ்புல்லா உத்தரவு

🕔 February 7, 2019
கிழக்கு மாகாண ஆளுநருடைய மாளிகையினை பராமரிப்பு செய்வதற்காக ஒதுக்கப்படும் நிதியை, தந்தையை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வழங்க, ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தீர்மானித்துள்ளார்.

ஆளுநருடைய மாளிகையினை பராமரிப்பு செய்வதற்காக ஒவ்வொரு வருடமும் 20 மில்லியன் ரூபா நிதியை கிழக்கு மாகாண சபை ஒதுக்கீடு செய்து வருகின்றது.

இந்த நிலையில், குறித்த நிதியை உடனடியாக நிறுத்தி, அதனை கிழக்கு மாகணத்தில் இருக்கின்ற தந்தையை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வழங்க தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று காலை கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பேரில் நிதி அமைச்சு, திட்டமிடல் அமைச்சு,கல்வி அமைச்சு, சமூக சேவைகள் அமைச்சு உள்ளிட்டவற்றின் அதிகாரிகளுடனான கலந்துரையாடலையடுத்து, கிழக்கு மாகாணத்திலே ஐந்தாம் ஆண்டுவரை பாடசாலைகளில் கல்வி கற்கின்ற தந்தையை இழந்த மாணவர்களுக்கு , ஒரு மாணவருக்கு மாதாந்தம் 500 ரூபா வீதம் கொடுப்பணவு வழங்குமாறு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் யுத்தம், இயற்கை அனர்த்தம் போன்ற காரணங்களால் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தங்களுடைய தந்தையை இழந்து வருமானமற்று இருக்கின்ற நிலை ஆளுநர் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது . அண்மையில் வாகரை பிரதேசத்தில் சிறிய மாணவர்கள் நிலக்கடலை போன்ற பொருட்களை விற்று தங்களின் ஜீவனோபாயத்தை நடத்துவதாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியாகி இருந்தன.

அத்தோடு பல்வேறுபட்ட பிரதேசங்களில் ஐந்தாம் ஆண்டுவரை படிக்கின்ற மாணவர்கள் இவ்வாறான எந்தவொரு வருமானமும் இல்லாத நிலையில், சிறு தொழில்கள் செய்வதாக ஆளுநர் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

தந்தையை இழந்த மாணவர்களுடைய பெயரில் வங்கிக்கணக்கொன்று திறக்கப்பட்டு மார்ச் முதலாம் திகதி தொடக்கம் குறிப்பிட்ட மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு அந்த நிதி வைப்பிலிடப்படும். அவர்கள் அந்த நிதியை பெற்று தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதற்குரிய திட்டத்தை ஆளுநர்  நடைமுறைபடுத்தவுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்