அட்டாளைச்சேனை வீதிகளில் கட்டாக்காலி மாடுகள்: சோர்ந்து விட்டார்களா பிரதேச சபையினர்

🕔 February 6, 2019

– முன்ஸிப் அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதான வீதியில் வாகன போக்குவரத்துக்கு தடையாகவும், மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலும் மாடுகள் கட்டாக்காலிகளாக தொடர்ந்தும் உலவுகின்றமை குறித்து பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறு கட்டாக்காலிகளாக அலையும் மாடுகளை பிடித்து அடைக்கும் நடவடிக்கையொன்றில், அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் அண்மையில் ஈடுபட்டனர்.

இதன்போது பிடிக்கப்பட்ட 11 மாடுகளின் உரிமையாளர்களிடமிருந்து தலா 03 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் அறவிட்டதாக, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் ஏ.எல். பாயிஸ் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரிவித்திருந்தார்.

ஆயினும், அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மற்றும் கல்வியல் கல்லூரி ஆகியவற்றின் முன்னால் அமைந்துள்ள பிரதான வீதியில் தொடர்ந்தும் கட்டாக்காலி மாடுகள் காணப்படுகின்றமை குறித்து பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இன்று புதன்கிழமை சுமார் 04 மணியளவில் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மற்றும் கல்வியல் கல்லூரி ஆகியவற்றின் முன்னால் அமைந்துள்ள பிரதான வீதியில் காணப்பட்ட கட்டாக்காலி மாடுகளின் படங்களையே இங்கு காண்கிறீர்கள்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிதிகளில் கட்டாக்காலிகளாக உலவும் மாடுகளை பிடித்து அடைப்பதோடு, அவற்றின் உரிமையாளர்களிடம் அபராதம் அறவிடுவது என, பிரதேச சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்த விடயத்தில் பிரதேச சபை நிருவாகத்தினர் தொடர்ந்தும் கடுமையான போக்கை கடைப்பிடிக்க வேண்டுமென்றும், கட்டாக்காலி மாடுகளை பிடித்து அடைக்கும் நடவடிக்கையை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டுமென்றும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தொடர்பான செய்திகள்: 

01) வீதியில் நடமாடிய 12 மாடுகள் பிடித்து அடைப்பு: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிரடி நடவடிக்கை 

02) கட்டாக்காலி மாடுகளை பிடிக்க தீர்மானம்; தண்டம் 03 ஆயிரம் ரூபாய்: அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் தெரிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்