தேசிய அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்கு, ஜனாதிபதி எதிர்ப்பு: சுதந்திர தின உரையில் வெளியிட்டார்

🕔 February 4, 2019

ரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கொண்டுள்ள கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இந்த எதிர்ப்பினை அவர் வெளியிட்டார்.

காலிமுகத் திடலில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றன.

“தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பேசப்படுகிறது. ஊடகங்களில்தான் நான் அதை கண்டேன். ஆயினும் அதனை நான் நிராகரிக்கிறேன்” என்று இதன் போது தெரிவித்த ஜனாதிபதி; ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை சேர்த்து, தேசிய அரசாங்கம் அமைப்பது சரிதானா எனவும் கேள்வியெழுப்பினார்.

அவர் மேலும் கூறுகையில்;

“மாகாண சபைத் தேர்தல் ஒன்றரை வருட காலம் நடத்தப்படாமல் இருப்பது ஜனநாயகம் இல்லை. இதை பற்றி, அரச சார்பற்ற நிறுவனங்கள் எதுவும் ஏன் பேசவில்லை.

பெப்ரவரி 04ஆம் திகதி நாம் சுதந்திரமடைந்த நாளாகும். ஆனாலும், வெளிநாட்டு அழுத்தங்கள் அன்று போல் இன்றும் வேறு வடிவத்தில் வந்துள்ளன.

சுதந்திரத்தின் பின்னர் இதுவரை அரசியல் ரீதியான தீர்வு மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு சரியான தீர்வை காண முடியாமல் இருப்பது ஒரு பின்னடைவாகும். இந்த நூற்றாண்டுக்கேற்ப நாம் எமது பொருளாதார யுக்திகளை வகுக்க வேண்டும்.

2015ஆம் ஆண்டில்  நாம் அமைத்த தேசிய அரசாங்கம், செய்ய வேண்டியதை செய்யவில்லை.செய்யக் கூடாததை செய்தது. மக்களின் தேவை நிறைவேற்றப்படவில்லை. நாடாளுமன்றம் இன்று கேலிக்குள்ளாகி இருக்கிறது. துரதிஷ்ட சம்பவங்கள் நடக்கும் இடமாக அது மாறியுள்ளமை கவலைக்குரியது.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது பற்றி பல தலைவர்கள் பேசினர் . ஆனால் பொருளாதார முன்னேற்றம் பற்றி யாரும் கவனிக்கவில்லை. இரண்டுமே வெற்றியடையவில்லை.

போதைப்பொருள் கேந்திர நிலையமாக இலங்கை மாற்றியுள்ளது. ஊழலை, மோசடியை, பாதாள உலக கோஷ்டியை ஒழிக்க நாம் திடசங்கற்பம் பூணுவோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்