பல்கலைக்கழக கல்வியுடன் மட்டும் மாணவர்கள் தம்மை, மட்டுப்படுத்தி விடக் கூடாது: அமைச்சர் றிசாட் அறிவுரை

🕔 February 1, 2019

மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியுடன் மட்டும் தம்மை மட்டுப்படுத்தி கொள்ளாது, அந்த வட்டத்துக்கு அப்பாலும் சென்று  தொலை நோக்குடன் தூர சிந்தனையுடன்  அறிவை தேடுவதன் மூலம் சமூகத்துக்கு அரிய பயன்கள் கிடைக்கின்றதென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்

புத்தளம் கடையா மோட்டை மத்திய கல்லூரியில் இருந்து பல்கலைக்கழக த்துக்கு தெரிவான மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு, அதன் அதிபர் சாஹிர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக அமைச்சர் பங்கேற்று உரையாற்றினார்.

அமைச்சர் மேலும் கூறுகையில்;

“பல்கலைக்கழகக்கல்வி என்பது  எல்லோருக்கும் கிடைப்பதில்லை. இறைவன் சிலருக்கு மட்டுமே இவ்வாறான சந்தர்ப்பத்தை வழங்குகின்றான். பல்வேறு கஷ்டங்களைத்தாண்டி பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி கிடைப்பதற்காக பெற்றோர் பாடுபடுகின்றனர். அத்துடன்  அதிபர் மற்றும்  ஆசியர் குழாம் அர்ப்பணிப்புடன் கற்பிக்கின்றனர். இதற்கு மத்தியிலேதான் நீங்கள் கற்று, உயர்கல்விக்காக செல்கின்றீர்கள். பல்கலைக்கழகத்தில் சுதந்திரமான வாழ்க்கை கிடைக்கும்போது, கடந்த காலங்களை மறந்து, மனம் போன போக்கில் நடக்க கூடாது.

இஸ்லாமிய வழியில், பெருமானாரின் வழிமுறையில் நாம் பல்கலைக்கழககத்திலும் நமது அன்றாட செயல்பாடுகளை மேற்கொண்டால்தான் நமக்கு  ஈடேற்றம் கிடைக்கும். எந்த சந்தர்ப்பத்திலும் எல்லை மீறாதீர்கள். இத்தனை காலம் பெற்றோரின் சொற்படியும் ஆசிரியர்களின் வழிகாட்டலிலும் செயல்பட்ட நீங்கள், எதிர்கால வாழ்க்கையையும் பெற்றோரின் ஆலோசனைப் படி அமைத்துக்கொள்ளுங்கள்.

கடையா மோட்டை மத்திய கல்லுரியை பொறுத்த மட்டில் அதனுடைய வளர்ச்சி அபாரமானது. சில மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த கல்லுரியானது  குறைவான வளங்களை கொண்டிருந்த போதும் கல்வி வளர்ச்சியில் பாரிய அடைவு மட்டத்தை பெற்று வருகிறது  என்பது பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிய மாணவர்களின் எண்ணிக்கை புலப்படுத்துகின்றது” என்றார்.

இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர் எஹியா, கல்பிட்டி பிரதேச சபை தலைவர் இன்பாஸ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரியாஸ், பிரதேச சபை உறுப்பினர்க்களான ஆஸிக், பைசர், ஹிஷாம், அக்மல், தாரிக் உட்பட பலர் பங்கேற்றனர்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்