வட்ஸ்அப் இன் புதிய கட்டுப்பாடு; போலிச் செய்திகளை முடக்கும் திட்டம்

🕔 January 21, 2019

விடயமொன்றினை ஒரே நேரத்தில் 05 பேருக்கு மட்டுமே மீளஅனுப்பும் வகையில் (forward) வாட்ஸ்அப் நிறுவனம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகமான இந்தக் கட்டுப்பாடு தற்போது உலகம் முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் முக்கிய இடம் வகிக்கும் வாட்ஸ்அப் ஊடாக பல்வேறு விதமான நம்பகத் தன்மையில்லாத செய்திகள், படங்கள் சமீபகாலமாக பரப்பப்படுகின்றன. குறிப்பாக, பலாத்காரம், குழந்தைகள் கடத்தல், பசுக்களைக் கடத்துதல் தொடர்பான வீடியோக்கள் போன்றவை போலியாகச் சித்தரிக்கப்பட்டும், பழைய வீடியோக்களை சமீபத்தில் நடந்ததுபோல் சித்தரித்தும் பரப்பிவிடப்படுகின்றன.

மக்கள் இதை நம்பி பல்வேறு இடங்களில் வன்முறைகளிலும், தாக்குதல்களிலும் ஈடுபட்டனர். இந்திய அரசாங்கத்தின் உத்தரவை அடுத்து, வாட்ஸ்அப் நிறுவனம் இதைத் தடுக்கும் வகையில் ஒரே நேரத்தில் 05 பேருக்கு மட்டுமே மீளஅனுப்ப (forward) முடியுமான வகையில் கட்டுப்பாடு விதித்தது.

மேலும் வதந்திகளையும், போலிச் செய்திகளையும் தடுக்க, புதிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், ஒரு மெசேஜ் எங்கிருந்து வருகிறது, யார் அனுப்புகிறார்கள், பரப்புகிறார்கள் என்பதைக் கண்காணிக்கும் முறையை வகுத்து வருவதாகவும் வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

உலகில்  150 கோடி பேர் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்