உயர் கல்வி மாணவர்களின் மோதல்களுக்கு மத்தியிலுள்ள, அரசியல் சக்திகள் பற்றி அறிவோம்: அமைச்சர் ஹக்கீம்

🕔 January 1, 2019
“உயர்கல்வி துறையில் மாணவர்களின் மோதல்கள் மற்றும் எதிப்பு பேரணிகளுக்கு மத்தியில், தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு எத்தனிக்கும் சந்தர்ப்பவாத அரசியல் சக்திகள் பற்றியு தாங்கள் அறியாமலில்லை எனவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல்,நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

“மாணவர்கள் தமது கோரிக்கைகளை இவ்வாறான வழியில்தான் வெளிப்படுத்துகின்றனர். இருந்தபோதிலும் அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களது  கோரிக்கைகளுக்கு செவிமடுத்து அவர்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நாங்கள் முயற்சிப்போம். அந்த விஷயத்தில் சம்பந்தப்படுபவர்கள் பொறுமை கடைப்பிடிப்பதும் அவசியமாகும்” எனவும் அவர் கூறினார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்விற்கு தலைமை வகித்து உரையாற்றிய போதே அமைச்சர் ஹக்கீம் இவற்றை தெரவித்தார்.

அங்கு உரையாற்றுகையில் அவர் மேலும் கூறுகையில்;

 “எமக்கு கிடைத்துள்ள மிக குறுகிய கால எல்லையில் இந்தநாட்டில் உயர்கல்வி துறையில் பாரிய சாதனைகளை செய்ய முடியாது என்பது எங்களுக்கு தெரியும்.

ஆனால் இத்துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்ய முடியும். இதன் பிரதான இலக்கு மற்றும் பல்வேறுபட்ட காரணங்கள் தொடர்பில்  எமது அவதானத்தை இப்போது செலுத்தியுள்ளோம்.

இந்த நாட்டில் உயர்கல்வியின் தர நிர்ணயத்தை பேணுவது தொடர்பில்  பிரச்சினை உள்ளது. இங்கு அரச பல்கலைக்கழகங்கள் உட்பட வெளிவாரி பட்டபடிப்பினை வழங்கும்  நிறுவனங்கள் பல உள்ளன. ஆனால் இவற்றை  விடவும் அதிகமான தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் இங்கு செயற்படுகின்றன. இவற்றில் சில தனியார் பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியை பெற்று செயற்படுகின்றன. ஆனால் அவ்வாறில்லாமல் அநேகமானவை, உயர் தரத்தை உரியமுறையில் பேணாமல் செயற்படுகின்றன.

எனவே இவ்வாறான பிரச்சனைகளை தீர்க்க வேண்டுமாயின் இவற்றை ஆராய்வதற்கு சுயாதீன ஆணைக்குழு ஒன்றினை நிறுவி உயர்கல்வியின் தரத்தையும், சிறப்பினையும்  பாதுகாத்து  பேணுகின்ற வகையில் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்.

தொடரும் இந்த பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வாக  இதுவரைக்கும் பேணிவந்த உயர் கல்வியின் தரத்தினை பாதுகாக்கும் வகையில்  சுயாதீன ஆணைக்குழுவொன்றை  அமைப்பதற்கு தேவையான அமைச்சரவை பத்திரத்தை சமர்பிக்கவுள்ளேன்.

இது தொடர்பில் மிக ஆழமான ஆய்வினை மேற்கொண்டுளேன். அவ்வாறே உயர் கல்வியின் தரத்தினை மேம்படுத்துவது தொடர்பில்  முன்னர் இருந்த உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரோவினதும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி. சில்வாவினதும் பங்களிப்பு மகத்தானது.

எனவே இந்த நாட்டில் உயர் கல்வியின் தரத்தினை இன்னும் உயர்த்துவதற்கு எங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அவ்வாறே இந்த 2019 ஆம் ஆண்டை உயர்கல்வியின் தரத்தை பேணி பாதுகாக்கும் ஆண்டாக குறிக்க முடியும்.
கடந்த பல வருடங்களில் இந்த நாட்டில் உயர்கல்விக்கு பெருந்தொகை பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபாவின் பெறுமதியில் 60 பில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளது. அதாவது 60,000 லட்சம் ரூபாய்கள் செலவழிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த நாட்டின் உயர்கல்வி தொடர்பிலான பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் ஒழுக்கத்தை பேணும் விடயத்தில் அவதானமாக இருக்கவேண்டும். ஒழுக்கத்தை மீறும்  செயல்கள்  நடைபெற்றால் அவற்றுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையை தளர்த்த முடியாது.

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா, பிரதித்தலைவர் பேராசிரியர் பி.எஸ்.எம். குணரத்ன, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம். நயீமுல்லாஹ், அமைச்சின் மேலதிக செயலாளர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்