அரச பாடசாலைகளில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்தை வழங்குமாறு, பாதிக்கப்பட்டோர் கோரிக்கை

🕔 December 24, 2018
– ஹஸ்பர் ஏ ஹலீம் –

ரச பாடசாலைகளில் நிலவிய விளையாட்டு பயிற்றுவிப்பாளர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பதாரிகளுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் உடற்தகைமை ஆகியன நடத்தப்பட்டு ஒரு வருடம் கடந்த வின்னரும், அந்த நியமனங்கள் இற்றை வரைக்கும் வழங்கப்படாமல் தாங்கள் ஏமாற்றப்பட்டு வருவதாக, அகில இலங்கை தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்கள் சங்கம் இன்று இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் விசனம் தெரிவித்துள்ளது.

அரச பாடசாலைகளில் நிலவும் 3850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான வெற்றிடத்தை நிரப்பும் பொருட்டு, அரச வர்த்தமானி மூலம் நாடளாவிய ரீதியில் விண்ணப்பம் கோரப்பட்டிருந்ததாகவும் அந்த ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரச பாடசாலைகளின் விளையாட்டு துறையை விருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கோடு கல்வியமைச்சர் அகிலவராஜ் காரியவசம் இத் திட்டத்தினை அறிமுகப்படுத்தி, விளையாட்டுத்துறையில் தேசிய மற்றும் மாகாண ரீதியில் சாதனை புரிந்த விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது.

இதற்கமைய விண்ணப்பித்தவர்களுக்கு 2017 ம் ஆண்டு நேர்முகத் தேர்வு மற்றும் உடற்தகமை தேர்வு ஆகியவற்றினை கல்வியமைச்சு நடத்தி அதன் மூலம் 3850 பேரினை தெரிவு செய்து 2018 ம் வருடம் ஜூன் மாதம் நியமன பெயர்பட்டியலினை மாகாண ரீதியில் வெளியீடு செய்திருந்தது.

நியமன பெயர்பட்டியல் வெளியீடு செய்யப்பட்டு சுமார் ஆறு மாதங்களை கடந்திருக்கும் நிலையிலும் நியமனம் வழங்கபடாமல் உள்ளது.

நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலைக்கு முன்னர் மாகாண சபைகளை காரணம் காட்டி நியமனத்தை இழுபறி நிலைக்கு கொண்டு வந்திருந்தாலும், அரசியல் குழப்பநிலைக்கு பின்னர் குறித்த நியமனம் வழங்கத் தாமதமாவதற்கு, நாட்டின் ஜனாதிபதியே காரணம் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

எவ்வாறாயினும், காரணங்களை காட்டி இழுபறி நிலைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் இந் நியமனத்தால் 3850 தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் மனரீதியாகவும்,பொருளாதார ரீதியாகவும் தாங்கள் ஏற்கனவே செய்த தொழில்களை விட்டும் பாதிப்படைந்துள்ளார்கள்.

தெரிவு செய்யப்பட்ட 3850 பேரினையும் நம்பி 3850 குடும்பங்கள் காத்திருக்கின்றன.
குறித்த நியமனத்தை நம்பி பல திருமணம் முடித்த, தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களும் காத்திருக்கின்றனர்.

கடந்த ஆட்சிக்காலத்தில் இரண்டு பெரும்பான்மை கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்திருந்தாலும், தற்போது நாட்டில் ஐக்கிய தேசிய முண்ணனியினரே ஆட்சி அமைத்துள்ளார்கள்.

கடந்த ஆட்சி காலத்தில் கூறியதை போன்று இந்த ஆட்சிக் காலத்திலும் குறித்த நியமனத்தை வழங்காது காரணங்களை கூறுவார்களாயின், தெரிவு செய்யப்பட்ட 3850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களும் பாரிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி ஏற்படும்.

நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்ட 3850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கும், தற்போதைய அரசாங்கம் விரைவான தீர்மானத்தினை மேற்கொண்டு நியமனத்தை வழங்க வேண்டும்.

இழுபறி நிலையும், காரணம் கூறுதலும் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு விளையாட்டுதுறையில் சாதனைபடைத்த வீர வீராங்கனைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்தை ஜனவரி மாதத்திற்குள் தற்போதைய அரசாங்கம் வழங்கும் என, பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எதிர்பார்ப்பதாகவும் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்