அரசியலைப் புறந்தள்ளி விட்டு, சமூகத்துக்காக ஒன்றிணைவோம்: காதர் மஸ்தான்

🕔 December 8, 2018
ரசியலை புறம்தள்ளி சமூகத்துக்காகவும், அதன் அபிவிருத்திக்காகவும் ஒன்றிணைவது அனைவரினதும் கடமை என முன்னாள் மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  கே . காதர் மஸ்தான் தெரிவித்தார்.

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாவற்குளம் கிராமத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக காணப்பட்ட தாய்-சேய் நிலையத்துக்கு 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதுடன், அக்கிராமத்தில் உள்ள பாடசாலைக்கு சுற்றுமதில் அமைப்பதற்காக 07 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டு குறித்த வேலைத் திட்டங்களை இன்று சனிக்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

“தமிழ் பேசுகின்ற சிறுபான்மை மக்களாக நாம் இருக்கின்றோம் என்பதோடு, எமக்குள் பல்வேறான பிரிவுகளும் காணப்படுகின்றன.

நாம் சிறிய சமூகமாக இருந்தாலும், பலமான சமூகமாக இருக்க நமக்குள் இருக்கின்ற பிரிவினைகளை அகற்ற வேண்டும். அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அபிவிருத்தியை நோக்கி பயணிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

நமது ஒவ்வொரு பிரதேசத்திற்கும் பல்வேறான தேவைப்பாடுகள் காணப்படுகின்றன. அவற்றை ஒரு தனிநபரால் செய்து முடிக்க முடியாது. பலரது ஒத்துழைப்புகளும் அங்கே தேவைப்படும். எனவே ஒரு வேலைத்திட்டம் கொண்டு வரப்படுகின்ற பொழுது, அதன் நன்மைகளை கருத்தில் கொண்டு அதற்காக தமது ஆதரவை வழங்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

எனது சமூகத்துக்காகவும் என்னை நம்பி வாக்களித்தவர்களுக்காகவும் என்னால் முடியுமான என்னால் பெறக்கூடிய அனைத்து வேலைத்திட்டங்களையும் தேவைப்பாடுகளை அறிந்து ஒவ்வொரு பிரதேசமாக வழங்கி வருகின்றேன்.

அதற்காக பிரத்தியேகமாக எனது அலுவலகத்தில் பணியாளர்கள் செவ்வனே அந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கிராமம் கிராமமாக சென்று அந்த கிராமத்துக்கு தேவையானவற்றை முதன்மைப்படுத்தி வழங்கக்கூடிய வேலைத்திட்டங்களையும் பட்டியலிட்டுகிறேன். கிடைக்கப்பெறுகின்ற நிதியை முன்னுரிமை அடிப்படையில் பகிர்ந்து அளிக்கின்றோம்.

நாட்டின் அரசியல் நிலைமையானது வலுவிழந்துள்ள நிலையிலும் எம்மால் கடந்த காலங்களில் செயற்படுத்தப்பட்ட அனைத்து வேலைத்திட்டங்களையும் நாம் நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

தற்போதைய சூழ்நிலையில் பலரும் தங்களது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் நாம் எதிர்கால சமூகத்தின் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக போராடிக் கொண்டிருக்கின்றோம்.

என்னால் கூடுமானவரை நாம் அரசியலுக்கு வர முன்னர் எவ்வாறான சேவைகளை மக்களுக்கு வழங்கியிருக்கின்றோம் என்பதை பலரும் அறிவர். ஆனாலும் அரசியலுக்கு வந்ததன் பின்னர் அந்த சேவையினை மேலும் விஸ்தரித்து இருக்கின்றோம். நாம் அரசியலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் நலன் கருதிய சேவைகளை செய்து கொண்டே இருப்போம்” என்றார்.

(நாடாளுமன்ற உறுப்பினரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்