ஜனாதிபதி கொலைச் சதித் திட்டம்: திடுக்கிடும் புதிய தகவல்களை வெளியிட்டார் நாமல் குமார

🕔 December 6, 2018

னாதிபதியை படுகொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டியவர்கள் யார் என்பது பற்றியும், அவர்கள் வெளியிட்ட தகவல்கள் குறித்தும், நாமல் குமார புதிய பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி பதவி வெற்றிடமானால், அப் பதவிக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்கும் ஒருவரை முன்மொழியலாம் என, அரசியலமைப்பில் இருக்கிறதாம் என்று, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர், தன்னுடன் உரையாடும் போது கூறியதாகவும் நாமல் குமார குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறையில் நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய போதே,  நாமல் குமார இந்த விடயங்களை தெரிவித்தார்.

“ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொலை சதித்திட்டத்தின் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகிய பிரதான சூத்திரதாரிகள் இருக்கின்றனர்” என நாமல் குமார இதன்போது மேலும் கூறினார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்;

“இவ் வருடம் கடந்த ஓகஸ்ட் மாதம் 16 ஆம் திகதியளவில் நான் பொலிஸ் மா அதிபரை சந்திக்க சென்றிருந்தேன். அப்போது அவர்; ‘எப்படி நாமல் சந்தோஷமா? இவன் என்னுடைய ஆள்” என்று கூறும் போது, நாலக சில்வா – சிவில் உடையில் அங்கு வந்தார். ‘உங்களுக்கு பரிசொன்று இருக்கிறது’ என்று கூறி அவர் 02 காசோலைகளை கையில் எடுத்தார்.

அந்த இரு காசோலைகளிலும் இரண்டரை இலட்சம் ரூபா என குறிப்பிடப்பட்டிருந்தது.

பொலிஸ்மா அதிபர்தான் அவற்றை என் கைகளில் தந்தார். ஊடகவியலாளர்களும் புகைப்படங்களை எடுத்தனர். பொலிஸ்மா அதிபர் காசோலைகள் இரண்டையும் அப்போதே இழுத்து எடுத்தார்.

பின்னர் பொலிஸ்மா அதிபர் என்னிடம்; ‘இதற்கு பிறகு நீ செய்ய நினைத்துக் கொண்டிருக்கும் அனைத்தையும் நிறுத்து இல்லாவிடின் என்னை கெட்ட மனிதனாக்கி கொள்ளாதே’ என்று அதிகாரத் தொனியில் கூறினார்.

அதற்கு நான் சிரித்தேனே தவிர வேறு எதுவும் கூறவில்லை. ஏனென்னறால் அவர் நல்ல மனிதனா? கெட்ட மனிதனா? என்று எனக்கு தெரியும்.

அவர் அன்று செய்த அந்த செயல்தான் எனக்கு கிடைத்த பெரிய சந்தோஷம். ஏனென்றால், நாட்டின் பொலிஸ்மா அதிபரும் இச் சதித்திட்டத்தின் பின்னணியில் இருக்கிறார் என, அன்று நான் தெரிந்து கொண்டேன்.

‘உன்னை நாலக சில்வாவிடம் பாரம் கொடுத்துள்ளேன். வேறு எந்த பொலிஸ் அதிகாரிகளுடன் நீ தொடர்புகளை வைத்துக்கொள்ள முடியாது. உன்னுடைய பேஸ்புக் மூலம் பிரச்சாரம் செய்பவற்றை உடனடியாக நிறுத்திக் கொள். நான் கூறுவதை கேட்டு நடந்து கொண்டால், உனக்கு பணம் கிடைக்கும்’ என பொலிஸ்மா அதிபர் என்னிடம் கூறினார்.

அதற்கு பிறகு அந்த இரு காசோலைகளையும் எனக்கு கொடுத்து விட்டு; ‘இந்த காசோலைகள் இரண்டும் நாலக சில்வாவின் பெயரில்தான் இருக்கின்றன. அவரிடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்’ என்று பொலிஸ்மா அதிபர் கூறினார்.

பின்னர் நான் இவற்றையெல்லாம் வெளிப்படுத்தி 24 மணித்தியாலங்கள் கடக்கும் முன்பே, பொலிஸ்மா அதிபர்; ‘நாமல் குமார வெளியிட்டுள்ள தகவல்களின் குரல் பதிவுகள் சந்தேகத்திற்கிடமானவை’ என்று அறிக்கை வெளியிட்டார்.

பொலிஸ்மா அதிபர் இவ்விடயம் தொடர்பாக விசாரணை செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்காது, மற்றொரு பிரிவிடம் விசாரணை செய்யுமாறு வழங்கினார்.

இவைதான் சந்தேகத்தை எழுப்புகின்றன. இவ் விடயத்தை மறைக்கவே அரசியல்வாதிகள் வெவ்வேறு வழிமுறைகளை பிரயோகிக்கிறார்கள். சரத் பொன்சேகா கோஷமிடுகிறார், ரணிலும் கோஷமிடுகிறார்.

நான் ஒரு வருட காலமாக இவ் விடயங்கள் தொடர்பாக நாலக சில்வாவுடன் பேசியுள்ளேன். அதற்கு நாலக சில்வா; ‘அரசியலமைப்பில் இருக்கிறதாம் ஜனாதிபதி பதவி வெற்றிடமானால் அப் பதவிக்கு பாராளுமன்றில் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்கும் ஒருவரை முன்மொழியலாம்’ என்று கூறினார்.

அவ்வாறெனில் யார் அந்த இடத்தை பெற முடிந்தவர், ரணில் விக்ரமசிங்கதான். அதனால் ‘நாங்கள் இந்த திட்டத்தை நிறைவேற்றினால் கரையேறிவிடலாம்’ என்று கூறினார்.

அதற்கு நான், இதற்கான திட்டம் எங்கே என்று நாலக சில்வாவிடம் கேட்டதற்கு நாலக சில்வா, ‘பயப்படாதே எங்களிடம் (சிங்களத்தில்) பBடு  (பொருள் அல்லது ஆட்கள் படை) இருக்கிறது’ என்று கூறினார்.

அப்போது, யார் அது – எஸ்.டி.எஃப் (S.T.F)ஆ என்று நான் கேட்டேன். ஏன் அப்படி கேட்டேனென்றால் கண்டி தெல்தெனிய கலவரம் இடம்பெற்ற சந்தர்ப்பத்திலும்  பொலிஸ் வாகனத்தில் நாலக சில்வாவின் அருகில் நான் அமர்ந்து கொண்டுதான் இருந்தேன். அச் சந்தர்ப்பத்திலும் நாலக சில்வாவோடு சரத் பொன்சேகா தொலைபேசியில் பேசினார். அவை அனைத்தையும் நான் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன்.

அவர்கள் கதைத்த பெரும்பாலான விடயங்கள் எனது கைத்தொலைப்பேசியில் பதிவாகியுள்ளது.

அது மட்டுமல்லாது  இலங்கை பொலிஸ் ஆணைக்குழுவின்  செயலாளர் சமன் திஸாநாயக்கவை அப் பதவியிலிருந்து நீக்க மேற்கொண்ட திட்டம், கொழும்பு மேற்கு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி நந்தன முனசிங்க, களுத்துறை மாவட்டம் பிரதி பொலிஸ்மா அதிபர் கொடித்துவக்கு, விஷேட அதிரடி படை கட்டளைத் தளபதி லதீப் மற்றும் உதவிப் பொலிஸ் அதிகாரி பிரசன் டி அல்விஸ் ஆகியோரை கொலை செய்வதற்கு மேற்கொண்ட சதித்திட்டங்களின் குரல் பதிவுகளையும், நான் இன்னும் சேகரித்துக்கொண்டுதான் இருக்கிறேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்