பிரதமர், அமைச்சர்களுக்கான இடைக்காலத் தடைக்கு எதிராக மேன்முறையீடு

🕔 December 4, 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் அவர்களின் பதவிகளை வகிப்பதற்கு தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராக, இன்று செவ்வாய்கிழமை உச்ச நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான அங்கிகாரமில்லையெனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட நீதிப் பேராணை மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நேற்றைய தினம் இந்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து மேற்படி நீதிப் பேராணை மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகியோர் முன்னிலையில் நேற்று இரண்டாவது நாளாக, இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய அமைச்சரவை உறுப்பினர்கள் தமது பதவிகளை வகிக்க இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சரவை உறுப்பினர்களையும் மேன்முறையீட்டு நீதிமன்றில் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆஜராகுமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்