ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு கோரி, ஜனாதிபதிக்கு த.தே.கூட்டமைப்பு கடிதம்

🕔 November 29, 2018

“ஐக்கிய தேசிய முன்னணியினால் நியமிக்கப்பட்ட, நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை பெறக் கூடியவர் என நீங்கள் கரும் நபரை, பிரதமராக நியமிக்க வேண்டும்” என்று, ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கடந்த ஒக்டோபர் மதம் 26 ஆம் திகதியிலிருந்து நடந்த அனைத்து சம்பவங்களினதும் பின்னணியின் அடிப்படையில் மேற் குறித்த விடயம் தொடர்பில் நாங்கள் அக்கறைக் கொண்டு, இக் கடிதத்தை எழுதுகின்றோம்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி பிரதமராக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர், அவர் நியமிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையிலும், இந்தக் காலப் பகுதியில் பல தடவை நாடாளுமன்றம் கூடியுள்ள போதிலும், அவரால் தனக்கு நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை நம்பிக்கை உள்ளது என்பனை நிரூபித்துக் காட்ட முடியாத ஒருவராக காணப்படுகின்றார்.

அதேவேளை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் மீது, பிரதமராக இருப்பதற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கடந்த 14, 16 ஆம் திகதிகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

‘குரல்’ அடிப்படையில் எடுக்கப்பட்ட வாக்குகள் 122 உறுப்பினர்களின் கையொப்பங்களினுடன் ஜனாதிபதி ஆகிய உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி இது தொடர்பிலான சபாநாயகரின் அறிக்கைகளும் உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமராக இருப்பதற்கு நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை பெற்றுள்ளாரா? என்ற வினாவுக்கு பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்து எதிராகவே உள்ளது. அதுமாத்திரமன்றி சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கப்பட்டும் உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர், பிரதமராக – தான் இருப்பதற்கு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையினைப் பெற்றுள்ளார் என்பதனை நிரூபித்துக் காட்ட இயலாது போயுள்ளது.

இந்நிலையில் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமராக இருப்பதற்கு எதிராக கடந்த 14 மற்றும் 16 ஆம் திகதிகளில் நிறைவேற்றப்பட் நம்பிக்கையில்லாத் தீர்மானங்களானது, இந்த நாட்டில் ஒரு பிரதமரோ, அமைச்சரவையோ சட்டபூர்வமாக நியமிக்கப்பட்ட அரசாங்கம் ஒன்றோ இருக்கின்றதா என்ற முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது.

இந் நிலைமை தொடர்ந்து நீடிக்க முடியாது என்பதை நாம் மிகவும் மரியாதையுடன் கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.

இதனால் நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமராக நியமிக்கப்படுவதனை உறுதி செய்யும் வகையில், இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நாம் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதிக்கு முன்னர் இருந்த ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தினை மீள அமைப்பதற்கு ஆதரவளிப்போம்.

அத்துடன், ஐக்கிய தேசிய முன்னணியினால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை பெறக் கூடியவர் என, நீங்கள் கரும் நபரை பிரதமராக நியமிக்க வேண்டும் எனவும், தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

மேற் குறிப்பிட்ட விடயங்களை ஜனாதிபதியாகிய தங்களுக்கு தெரியப்படுத்துவதை எமது கடமையாக கருதுகின்றோம்.

மேற்படி கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரா.சம்பந்தன், மாவை. சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், எஸ்.ஸ்ரீதரன், ரி. சித்தார்த்தன், ஈ. சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, சி. சிவமோகன், சீனித் தம்பி யோகேஸ்வரன், ஞா. சிறிநேசன், கே. கோடீஸ்வரன் மற்றும் க. துரைரட்ணசிங்கம் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்