பாலியல் பலாத்காரத்தினை, சித்திரவதை செய்வதற்கானதொரு பொறிமுறையாக ராணுவத்தினர் பயன்படுத்தினார்கள் என, ஐ.நா. அறிக்கையில் தெரிவிப்பு

🕔 September 16, 2015
UNHR - 012லங்கையின் பாதுகாப்புத் தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டோர் மீது, பாலியல் பலாத்காரம் புரியப்பட்டதாகவும், இவை, சித்திரவதை செய்வதனை நோக்காகக் கொண்ட கொள்கையின் அடிப்படையில், திட்டமிட்டுப் பாவிக்கப்பட்ட பொறிமுறைகளாகும் என்னும் ஐ.நாடுகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் 15 வயதுக்கும் குறைவான சிறுவர்களைப் பிடித்து, யுத்தத்தில் ஈடுபடுத்தியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் முழு வடிவம் வருமாறு;

இலங்கையில் 2002 இல் இருந்து 2011 ம் ஆண்டு வரை பாரதூரமான உரிமை மீறல்களின் வடிவங்களை அடையாளம் கண்டுள்ளது.

இவை இலங்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் இருதரப்பினராலும் பெரும்பாலும் இழைக்கப்பட்டிருக்கலாம் என்று வெளிப்படுத்துகின்றன.

இவ்வறிக்கை, நீதியை அடைந்துகொள்வதற்கு சர்வதேச நீதிபதிகள், வழக்குத் தொடுப்பவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்களை உள்ளடக்கிய ஒரு கலப்பு சிறப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிப்பது முக்கியமென்று பரிந்துரை செய்துள்ளது.

எமது விசாரணை, இலங்கையில் நடைபெற்ற குரூரமான மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள், பாகுபாடற்ற எறிகணைத்தாக்குதல் (ஷெல் தாக்குதல்), நீதிக்கு புறம்பான கொலைகள், காணாமலாக்கப்படல்,  மனிதாபிமானமற்ற சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள், சிறுவர் ஆட்சேர்ப்பு மற்றும் வேறு பாரதூரமான குற்றங்களை வெளிக்கொணர்ந்துள்ளது என உயர்ஸ்த்தானிகர் சையிட் கூறியுள்ளார்.

முக்கியமாக, இவ்வறிக்கையினூடாக வெளிக்கொணரப்பட்டுள்ள மீறல்கள், முழு சர்வதேச சமூகத்தினதும் கவனத்தை ஈர்க்கும் பாரதூர குற்றங்களாகும்.

இவ்வறிக்கை இலங்கையில் நம்பிக்கை தரும் புதிய அரசியல் சூழலின் மத்தியில் முன்வைக்கப்படுகின்றது என்று சையிட் கூறினார். மேலும், “நம்பகத்தன்மையான அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வரக்கூடிய, இந்த வரலாற்றுச் சிறப்புடைய வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது முக்கியம்” எனவும் கூறினார்.

இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்ட பாரதூரமான குற்றங்களாவன:

சட்டத்திற்குப் புறம்பான கொலைகள்: 2002க்கும் 2011க்கும் இடையில் எண்ணற்ற சட்டத்திற்கு புறம்பான கொலைகள் இருதரப்பினர், மற்றும் பாதுகாப்புப் படையினருடன் தொடர்புடைய ஆயுத குழுக்களால் செய்யப்பட்டன என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இக்கொலைகளால் பாதிப்புக்குள்ளானோர் என அடையாளம் காணப்பட்டோருள், தமிழ் அரசியல்வாதிகள், மனிதாபிமான செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சாதரண பொது மக்கள் உள்ளடங்குவர்.

நீதிக்கு புறம்பாக இழைக்கப்பட்ட கொலைகள் இனங்காணப்படக்கூடிய வடிவங்களிலேளேயே நடைப்பெற்றுள்ளன.

உதாரணமாக, இக்கொலைகள் பாதுகாப்புப் படையினரின் சோதனைச்சாவடி, மற்றும் படைத்தளங்களுக்கு அருகாமையில் நடைப்பெற்றுள்ளதுடன், இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களில் ராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டோர், இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தோர், மற்றும் ராணுவத்தினரால் பிடிக்கப்பட்டோர் உள்ளடங்குவர்.

தமிழீழ விடுதலைப்புலிகளும் – தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள பொதுமக்களை பாரபட்சமற்ற தற்கொலைத் குண்டுத் தாக்குதல்கள், கண்ணிவெடித் தாக்குதல்களுக்கு உட்படுத்தியதுடன், கல்விமான்கள் மற்றும் மாற்றுக் கருத்துள்ள தமிழ் அரசியல் பிரமுகர்களை குறிவைத்து கொலை செய்துள்ளனர் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாலியல் மற்றும் பால்நிலை சார்ந்த வன்முறை: பாதுகாப்புப் படைத்தரப்பினரால் தடுத்துவைக்கப்பட்டோர் மீது, குரூரமான பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதுடன், இவ்வாறான பாலியல் வன்முறைகள் அதிகளவில் பிரயோகிக்கப்பட்டன எனும் அதிர்ச்சிகரமான விடயத்தை இவ்விசாரணை வெளிகொணர்ந்துள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பெண்கள் மாத்திரமின்றி ஆண்களும் அடங்குவர். பாலியல் வன்முறையினால் பாதிக்கப்பட்ட 30 பேரிடம் பதிவு செய்யப்பட்ட, துன்பகரமான சாட்சியங்களின் அடிப்படையில், பாலியல் வன்முறைகள் தனிப்பட்ட செயற்பாடுகளல்ல, அதற்குமாறாக அவை சித்திரவதை செய்வதனை நோக்காகக் கொண்ட கொள்கையின் அடிப்படையில், திட்டமிட்டுப் பாவிக்கப்பட்ட பொறிமுறைகளாகும் என்பது தெளிவாகின்றது.

பாலியல் வன்முறைகளின் வடிவங்களை நோக்கும் போது, பாலியல் சித்திரவதைகள் விசாரணைகளின் போதும், பாலியல் வல்லுறவுகள் அநேகமாக விசாரணை இல்லாத வேறு சந்தர்ப்பங்களிலும் நடைப்பெற்றன என்பதை இவ்வறிக்கை விபரிக்கின்றது.

பாலியல் சித்திரவதைகள் வெவ்வேறு விதமான தடுப்பு நிலையங்களிலும், பலவிதமான பாதுகாப்பு தரப்பினராலும், யுத்தத்தின் போதும் அதன் பின்பும் இழைக்கப்பட்டுள்ளன.

பாலியல் வன்முறைகளை இழைத்தவர்களில் ஒருவர் கூட, இன்று வரை சட்டத்தினால் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டதாக அறியக்கிடைக்கவில்லை.

காணாமலாக்கப்பட்டோர்: காணாமலாக்கப்படல் என்பது பல்லாயிரக்கணக்கான இலங்கையரை பல தாசாப்தங்களாக பாதித்துள்ளது.

இப்பாதிப்பானது பாதுகாப்புப் படைத்தரப்பினருக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையில் நடைபெற்ற 26 வருட யுத்தக்காலத்தையும் உள்ளடக்கும்.

காணாமலாக்கப்படல் என்பது பொதுமக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பரந்த மற்றும் திட்டமிடப்பட்ட தாக்குதலாக இருக்க கூடும் என்பதனை நம்புவதற்கு காரணங்கள் உள்ளன.  யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் சரணடைந்த பலர் காணாமலாக்கப் பட்டார்கள் என்பதனை நம்புவதற்கு காரணங்கள் உள்ளன.

அவர்களது இருப்பு இன்று வரை கண்டறியப்படவில்லை. பலர், யுத்தத்தோடு நேரடியாக தொடர்பில்லாதவர்களும், பொதுவாக வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு, அதன்பின் காணாமலாக்கப் பட்டுள்ளார்கள்.

சித்திரவதைகள் மற்றும் வேறு விதமான கொடுமையான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமான  நடத்துகைகள்:  இவற்றிக்கையால் விசாரணக்குட்படுத்தப்பட்ட தசாப்தத்தில் இலங்கை பாதுகாப்பு படையினர் பரந்தளவில், குரூரமான சித்திரவதைகளை, முக்கியமாக யுத்தம் முடிவடைந்த காலத்தில் இழைத்துள்ளனர்.

குறிப்பிட்ட சில தடுப்புமுகாம்களில் சித்திரவதைக்கான உபகரணங்களைக் கொண்ட அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இது சித்தரவதை திட்டமிடப்பட்ட முறையில் பிரயோகிக்கப்பட்டது என்பதனை வெளிப்படுத்துகின்றது.

இவ்வறைகளில் அடிப்பதற்கான இரும்புத்தடிகளும், பொல்லுகளும், நீரில் அமிழ்த்தி மூச்சுத்திணறலை ஏற்படுத்துவதற்காக தண்ணீர் பீப்பாய்களும், மற்றும் தடுப்பிலுள்ளோரை தொங்கவிடுவதற்கான உழண்திகளும் காணப்பட்டன.

இவ்விசாரணையின் போது சாட்சியமளித்த, பாதிக்கப்பட்டோர்  – தங்களுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளை விபரிக்கும் போது, குறித்த அறைகளின் சுவர்களிலும், நிலத்திலும் இரத்தக் கறைகளைக் கண்டதாகக் கூறினார்கள்.

சிறுவர் ஆட்சேர்ப்பு, மற்றும் யுத்தத்தில் பாவித்தல், வயது வந்தோர் கடத்தல் மற்றும் வலுக்கட்டாயப் படுத்தப்பட்ட ஆட்ச்சேர்ப்பு: கிடைத்த தகவலின் அடிப்படையில், யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் வயது வந்தோரைக் கடத்தி, வலுகட்டாய ஆட்ச்சேர்ப்புக்கு உட்படுத்தினர் எனும் விடயம் தெரியவந்தது.

முக்கியமாக, யுத்தத்தின் இறுதிப்பகுதியில் வலுகட்டாயப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு தீவிரமடைந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளும், 2004 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து, அரசுடன் செயற்பட்ட கருணா குழுவினரும், பரந்தளவில் சிறுவர்களை ஆட்சேர்ப்பு செய்து, அவர்களை யுத்தத்தில் பாவித்துள்ளனர் என்பது ஆவணப் படுத்தப்பட்டுள்ளது.

சிறுவர்கள், வீடுகள், பாடசாலைகள், கோவில்கள் மற்றும் சோதனைச்சாவடிகள் ஆகிய இடங்களில் இருந்து, வலுக்கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்டு, அடிமட்டப் பயிற்சி வழங்கப்பட்ட பின்னர், போர்க்களத்துக்கு அனுப்பப்பட்டனர்.

யுத்தத்தின் இறுதி மாதங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் 15 வயதிற்குக் குறைந்த சிறுவர்களை ஆட்சேர்ப்புச் செய்தனர் என்று, பல அறிக்கைகள் கூறுகின்றன. இச்செயற்ப்பாடுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் அவை போர் குற்றங்களாகக் கருதப்படும்.

பொதுமக்கள் மற்றும் பொது உடமைகள் மீதான தாக்குதல்கள்: யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் நடத்தப்பட்ட பல தாக்குதல்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கோட்பாடுகளுக்கு ஏற்ப, அதாவது போரை நடத்துவதற்கான விதிமுறைகளுக்கு ஏற்ப, அமையவில்லை.

முக்கியமாக, ராணுவ உடமைகளுக்கும் – பொது உடமைகளுக்கும் இடையிலான வேறுபாட்டை மதிக்க வேண்டும் என்று கூறும் கோட்பாடு மீறப்பட்டது என்பதனை நம்புவதற்கு காரணங்கள் உள்ளன.

மக்கள் செறிவாக காணப்பட்ட, தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களில், அரசாங்கம் உருவாக்கிய யுத்த சூனிய பிரதேசத்தில் அமைந்திருந்த மருத்துவமனைகள், மனிதாபிமான உதவி வழங்கும் நிலையங்கள் ஆகிய இடங்களின் மீது, அரச படைகள் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதை இவ்வறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது.

பொது உடமைகள் மற்றும் யுத்தத்தில் நேரடியாக பங்குபற்றாத பொது மக்கள் மீது, நேரடி தாக்குதால்களை நடத்துவது பாரதூரமான சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறலாகும்.

இது ஒரு போர் குற்றமாக கருதப்படலாம். யுத்ததில் நேரடியாகப் பங்குபற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க போராளிகள், பெரும்பாலும் பொது மக்கள் இருக்கும் இடங்களில் இருந்து செயற்பட்டதுடன், இவ்விடங்களுக்கு அருகாமையிலிருந்து தாக்குதல்களை தொடுத்தது, மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் – யுத்தகாலத்தில் வலுக்கட்டாயமாக பொது மக்களை தடுத்து வைத்திருந்தமையும், சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறலாகக் கூடும்.

ஆனாலும், தமிழீழ விடுதலைப்புலிகளின் இச்செயற்பாடுகளைக் காரணம் காட்டி, அரசாங்கம் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் அதன் பொறுப்புக்களை தட்டிக்கழித்திருக்க முடியாது.  சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மதிக்கும் கடமை மற்றைய தரப்பினரின் நடத்தையிலோ, பிரதிகீர்த்தியிலோ தங்கியிருக்கல்லை.

மனிதாபிமான உதவிகள் தடுக்கப்படல்: மனிதாபிமான செயற்பாட்டாளர்கள், அவர்களின் செயற்பாடுகள், மற்றும் நடமாடும் சுதந்திரத்தின் மீது, அரசாங்கம் கணிசமான தடைகளை விதித்து, வேண்டுமென்றே  வடமாகணத்தில் வன்னி பிரதேசத்திற்கு உணவு உதவி, மற்றும் மருத்துவப் பொருட்கள் சென்றடைவதை தடுத்திருக்கலாம்.

இச்செயலானது, பொதுமக்களை பட்டினி போடுவதை ஒரு யுத்தமுறைமையாக பிரயோகித்திருக்கலாம் என்பதை வெளிகாட்டுகின்றது. பொதுமக்களை பட்டினி போடுவது ஒரு யுத்த முறைமையாக பிரயோகிக்கப்பட்டது என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், அது போர் குற்றமாகக் கருதப்படலாம்.

வெளியில் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டு, நடமாடும் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டடிருந்த, இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் போது, அவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மீறல்கள்: தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளை. பொது மக்களில் இருந்து வேறுபடுத்தி பிரிப்பதற்காக பிரயோகிக்கப்பட்ட வழிமுறைகள் சர்வதேச விதிமுறைகளை மீறியது மட்டுமல்லாது, அம்மக்கள் துஸ்பிரயோகங்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் உட்படுத்தப்படுவதற்கு வழிவகுத்தன. ஏறத்தாழ மூன்று லட்சம் இடம்பெயர்ந்தோரின் சுதந்திரம், சர்வதேச சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட கால எல்லைக்கு மேலாக பறிக்கப்பட்டது.

மேலும், இடம்பெயர்ந்தோர் தமிழர்கள் என்பதால், அவர்கள் சந்தேகநபர்களாக நடத்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டார்கள் என்று நம்புவதற்கு காரணங்கள் உள்ளன.

இந்நடைமுறையானது, தமிழ் மக்கள் பாரபட்சத்துடன் நடத்தப்பட்டார்கள் என்றும்,  மனிதநேயத்திற்கு எதிரான குற்றமான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்றும் கருதப்பட இடமளிக்கின்றது.

இவ்வறிக்கை பல வருடங்களாக நடைபெற்ற உண்மைகளை மறுத்தல், மூடி மறைத்தல், உடனடி விசாரணைகளை நடத்தாமல் விடல், விசாரணைகளை இடைநிறுத்தல், மற்றும் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும், நீதிக்காக அழுத்தங்கள் கொடுத்து செயற்படுவோருக்கும் எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள், மற்றும் இழைக்கப்பட்ட மீறல்களை ஆவணப்படுத்துகின்றது.

மேலும், இவ்வறிக்கை பாதிக்கப்பட்டோருக்கு நீதியை வழங்குவதற்கு, உள்நாட்டுப் பொறிமுறைகள் தொடர்ச்சியாகக் கண்ட தோல்வியின் காரணத்தால், பாதிக்கப்பட்டோர் கோபம், ஐயுறவு மற்றும் அவநம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதை அவதானிக்கின்றது.

காரணம், குற்றங்களுக்கும், உரிமை மீறல்களுக்கும் காரணமான கட்டமைப்புகள் எவ்வித சீர்திருத்தங்களுக்கும் உட்படுத்தப்படாது அதே நிலையில் காணப்படுகின்றன.

குற்றங்கள் ராணுவத்தினராலும், பாதுகாப்புப் படையினராலும் இழைக்கப்படும் போது, அதற்கு ஏற்ற நடவடிக்கை எடுக்க இயலாமல் இருப்பது கட்டமைப்புகளின் பலவீனத்தை சுட்டிக்காட்டுகிறது.

மனித உரிமை மீறல்களை இழைக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்க எத்தனிக்கும் சட்டவியளாலர்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள், மற்றும் இழைக்கப்பட்ட உரிமை மீறல்கள் ஆகியவற்றை இவ்வறிக்கை விபரிக்கின்றது.

பொறுப்புக் கூறலை ஒரு உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் கையாள்வதாக, இப்புதிய அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதி பாராட்டத்தக்கது. ஆனாலும், துரதிஸ்டவசமான உண்மை என்னவெனில், இலங்கையின் குற்றவியல் நீதிப் பொறிமுறை – இதைச் செயற்படுத்துவதற்கு திறனற்றதாக உள்ளது எனவும் இவ்வறிக்கை கூறுகின்றது. முதன்மையான விடயம் என்னவெனில், பாதிக்கப்பட்டவர்களுக்கும், சாட்சியங்களுக்கும் பாதுகாப்பு வழங்க, நம்பகத்தன்மையுடைய பாதுகாப்புப் பொறிமுறை இன்றுவரை ஸ்தாபிக்கப்படவில்லை.

இராண்டவது, இலங்கையின் உள்நாட்டு சட்டக் கட்டமைப்பானது, பாரதூரமான சர்வதேச குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு கொள்திறன் இல்லாதுள்ளது.

மூன்றாவது சவால் என்னவெனில், பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்த அவசரகாலச் சட்டம், யுத்தம் மற்றும் குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பியமை ஆகியவற்றால் இலங்கையின் பாதுகாப்புத் துறையும், நீதித்துறையும் சிதைவடைந்துள்ளன.

இவ்வாண்டு தை மாதம் தொடக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கம் முன்னெடுத்துள்ள ஆக்கபூர்வமான செயற்பாடுகளை, உயர்ஸ்தானிகர் வரவேற்றுள்ள அதேநேரம், இலங்கை முன்னோக்கி பயணிப்பதற்கு தசாப்தங்களாக நடைபெற்ற உரிமை மீறல்களின் காரணமாக, ஆழமாக வேரூன்றியுள்ள அடக்குமுறை கட்டமைப்புகள், மற்றும் நிறுவன கலாச்சாரங்களை அகற்ற வேண்டும் என்று கூறினார்.

இது ஒரே நாளில் நடைபெறுவதற்கு சாத்தியமில்லாததால், எவரும் இப்பணியின் கடினத்தைக் குறைத்து மதிப்பிடலாகாது எனக் கூறியுள்ளார்.

இலங்கையின் வரலாற்றில், காணாமலாக்கப்படுதல் போன்ற செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என அரசாங்கங்கள் உறுதி மொழி கொடுத்திருந்தாலும், குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாமை மற்றும் இம்மாதிரியான துஸ்பிரயோகங்கள் இடம்பெறுவதற்கு வழிவகுத்த கட்டமைப்புகளில் உள்ள பிரச்சினைகளை வேரோடு அகற்றாமையினால், வெள்ளை வான்கள் தேவையான தருணத்தில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டன. இவ்வரசாங்கம் இத்தனித்துவமான வாய்ப்பைக் கைப்பற்றி குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்புவதனை இல்லாதொழிக்க வேண்டும். அரச நிறுவனங்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் செயற்படும் விதங்களில் அடிமட்டம் தொடக்கம் உயர்மட்டம் வரை மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.

கடந்த முப்பதாண்டு காலமாக இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி மற்றும் நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்காகவும், இம்மீறல்கள் மீண்டும் நடைபெறாது என்று உத்தரவாதமளிப்பதற்கும் ஒரு முழுமையான இடைக்கால நீதிக் கொள்கையை உருவாக்குமாறு இவ்வறிக்கை பரிந்துரை செய்கின்றது.

உண்மையை மறுக்குமொரு நிலையிலிருந்து, உண்மையை ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்து, ஆக்கபூர்வமான கலந்துரையாடலின் மூலம் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு இவ்வறிக்கையை ஒரு வாய்ப்பாக நோக்குபடி, புலம்பெயர் வாழ் மக்கள் உட்பட, சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் உயர்ஸ்தானிகர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பல வருடங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற மனித உரிமை மீறல்களினாலும், குற்றமிழைத்தவர்கள் தண்டனை பெறாது தப்பிப்பது சாதாரண மயமாக்கப்பட்டமையினாலும், இருதரப்பிலும்  பாதிக்கப்பட்டவர்களின் மனவடுக்கள் சீழ் கட்டி ஆழமாக பதியப்பட்டுள்ளன என்று சையிட் கூறினார்.

அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வந்து, இக்காயங்களை ஆற்றாவிட்டால், இவர்களின் தொடரும் வேதனையானது சமூகங்களுக்கிடையில் மேலும் பிளவுகளை ஏற்படுத்தி, நல்லிணக்கத்திற்கு ஒரு தடையாக அமைவது மட்டுமல்லாது, எதிர்காலத்தில் புதிய முரண்பாடுகளுக்கும் வழிவகுக்கும்.

அரச அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களின் மீது, பலதரப்பினருக்கும் இருக்கும் அவநம்பிக்கையினை குறைத்து எடைபோடலாகாது என உயர்ஸ்தானிர் கூறினார்.

இக்காரணத்தினால் சர்வதேச நீதிபதிகள், வழக்குத் தொடுப்பவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்களை உள்ளடக்கிய ஒரு கலப்பு சிறப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிப்பது முக்கியமாகும்.

ஒரு தனித்த உள்நாட்டு நீதிமன்ற செயல்முறையானது, பல தாசாப்த காலங்களாக நடைபெற்ற உரிமை மீறல்கள், முறைகேடுகள் மற்றும் உடைத்தெறியப்பட்ட வாக்குறுதிகளால் உருவாக்கப்பட்ட நியாயமான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய மாட்டாது.

மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்காக உள்நாட்டு குற்றவியல் நீதிக்கட்டமைப்பு, சீர்திருத்தப்பட்டு வலுவாக்கப்பட வேண்டும். ஆனால், இச்செயல்முறையைப் பூர்த்தி செய்வதற்கு பல்லாண்டு காலம் தேவைப்படும்.

ஆகையால், இச்சீர்திருத்தம் சிறப்புக் கலப்பு நிதிமன்றத்தை ஸ்தாபிப்பதற்கு இணைவாக செயற்படுத்தபட வேண்டும், அன்றி அதற்குப் பதிலாக அல்ல.

இவ்வகையான கலப்பு நீதிமன்றம், தேவையான சீர்திருத்தங்களை ஊக்குவித்து, பொது மக்களின் நம்பிக்கையையும் பெற்று, இலங்கையை நீதியான ஒரு புதிய பாதையில் இட்டுச்செல்லலாம்.”

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் அலுவலகத்திற்கு (OHCHR) 2014ம் ஆண்டு மனித உரிமை பேரவை, இலங்கையில் இருதரப்பினராலும் 2002ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டுவரை இழைக்கப்பட்ட பாரிய மீறல்கள், மனித உரிமை துஸ்பிரயோகங்கள், மற்றும் அதைச் சார்ந்த குற்றங்களை விரிவாக விசாரணை செய்யும் பொறுப்பைக் கொடுத்தது.

இந்த விசாரணையின் அறிக்கை, நேரடிச் சாட்சியங்கள், பாதிக்கப்பட்டோர் மற்றும் வேறு சாட்சியங்களோடு நடத்தப்பட்ட நேர்காணல்கள், இராணுவ மற்றும் தடயவியல் நிபுனர்களால்  பகுப்பாய்வு செய்யப்பட்ட ஒளிப்பதிவுகள், புகைப்படங்கள், செய்மதிப் புகைப்படங்கள் (இவற்றில் பல பொதுமக்களின் பார்வைக்கு பயன்பாட்டிற்கு எட்டாத வகையிலுள்ளன),  ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள் ஆகியவற்றை பரிசீலனை செய்து (இவற்றில் மூவாயிரம் வாக்குமூலங்கள், சமர்ப்பிப்புகள் மற்றும் வெளியிடப்படாத அறிக்கைளும் உள்ளடங்கும்) இவ்விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டது.

விசாரணைக் குழு இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு அனுமதிக்கபடவில்லை. இதற்கு மேலாக, முன்னாள் அரசாங்கம் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மற்றும் கண்காணிப்புகளால் இவ்விசாரணையுடன் மக்கள், முக்கியமாக வடக்கிலிருப்போர், ஒத்துழைப்பதை தடை செய்தமை, ஒரு சவாலக அமைந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்