மழை நீரின் மூலம் பாதுகாப்பான குடிநீரை சேகரிப்பது தொடர்பான மாநாடு; ஹிஸ்புல்லா தலைமை

🕔 November 26, 2018
‘மழை நீரின் மூலம் பாதுகாப்பான குடிநீரை சேகரிப்பது’ தொடர்பான சர்வதேச மாநாடு எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் பெலவத்தை, பத்தரமுல்லையில் அமைந்துள்ள சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை மழை நீர் சேகரிப்பு மையம் மற்றும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சுடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளது.

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் ஆரம்பமாகவுள்ள இம்மாநாட்டுக்கு, அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் டீ.ஜி.எம்.வீ. ஹப்புஆராச்சி ஆகியோர் அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர்.

சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஹேரத் மன்திலக்க, கொரியாவின் கோபல் கிரீன் நிறுவனத்தை சேர்ந்த ப்ரான்க் ரிஜ் ஸ்பேர்மன்ட் ஆகியோர் இந்த மாநாட்டில் சிறப்புரை நிகழ்த்தவுள்ளனர்.

ஐக்கிய அமெரிக்க உதவித் திட்டத்தின் அனுசரணையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் இந்தியா, நேபாளம், வங்காளதேசம், பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள இருப்பதுடன் அவர்களின் ஆய்வுகள், நடைமுறை செயற்பாடுகள், வெளிக்கள கற்கை அறிக்கைகள் என்பன சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இத்துறையில் புதிய கண்டுபிடிப்புக்களை மேற்கொள்ளல், மேலும் கூடுதலானோரை ஈடுபடுத்தச் செய்தல் என்பவற்றை ஊக்குவிக்கும் வழிமுறைகள் தொடர்பாகவும், நிபுணர் குழுக்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்படுகின்றது.

மேலும், மழை நீரை சேகரிப்பது தொடர்பான தேசிய சர்வதேச நிபுணர்கள் மத்தியிலான உறவை வலுப்படுத்துவதை நோக்காக கொண்டு நடத்தப்படும் இம்மாநாட்டின் அங்கமாக குறுந்திரைப்பட விழாவும், நடை பவணியொன்றும் இடம்பெறவுள்ளன.

மேலும், மழை நீரில் காணப்படும் ஆரோக்கியம் மற்றும் ஆபத்து நிலைமைகள், மழை நீரும் சுற்றாடலும், இப்பணியில் கூடுதலான மக்களை ஈடுபடுத்த செய்தல் முதலான விடயங்கள் தொடர்பாகவும் மாநாட்டில் ஆராயப்படவுள்ளன.

இந்த மாநாட்டின் அங்கமாக குறிப்பிடப்பட்டுள்ள குறுந்திரைப்பட விழாவும் நடைபவணியும் நாளை 27ஆம் திகதி இடம்பெறவுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்