யுத்தம் முடிவதற்கு சில நாட்கள் முன்னர், புலிகள் என்னை தொடர்பு கொண்டனர்: யசூசி அகாசி
“யுத்தம் முடிவடைவதற்கு சில நாட்களிற்கு முன்னர் கொழும்பு ஹோட்டலில் தங்கியிருந்த என்னை விடுதலைப்புலிகள் தொடர்புகொண்டனர்” என ஜப்பான் அரசாங்கத்தின் முன்னாள் விசேட பிரதிநிதி யசூசி அகாசி தெரிவித்துள்ளார்
ஆங்கில பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.
“விடுதலைப்புலிகளின் தலைவரை சந்திப்பதற்கான வாய்ப்பு, எனக்கு கிடைத்தது. 2003ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நான் பிரபாகரனை சந்தித்தேன் அது நீண்ட சந்திப்பு” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமாதானத்துக்கான வாய்ப்புகள் மற்றும் விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான சமாதானம் குறித்த எங்கள் எதிர்பார்ப்புகள் குறித்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம் எனவும் யசூசி அகாசி கூறியுள்ளார்.
“நான் அப்போது காணப்பட்ட வாய்ப்பை பயன்படுத்துமாறு பிரபாகரனை கடுமையாக வலியுறுத்தினேன். ஆனால் சமாதான பேச்சுவார்த்தைகளை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என்பதை பின்னர் நான் உணர்ந்தேன்”.
”எங்கள் சந்திப்பிற்கு நாங்கள் ஓன்றாக மதிய உணவருந்தினோம் அவ்வேளை பிரபாகரன் சற்று இயல்பான நிலையில் காணப்பட்டார். காலையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தீவிரமானவையாகவும் உத்தியோகபூர்வமானவையாகவும் காணப்பட்டன.
மதிய உணவிற்கு பின்னர் நாங்கள் உத்தியோகபூர்வமற்ற பேச்சுகளில் ஈடுபட்டோம்.பிரபாகரன் தனது மகன் தனது குடும்பம் தனது எதிர்பார்ப்புகள் குறித்து கூறினார்.
பிரபாகரன் தனக்கு வழங்கப்பட்ட பல சந்தர்ப்பங்களை தவறவிட்டார் என்பது பற்றி நான் ஆழ்ந்த கவலைகொண்டுள்ளேன்.
யுத்தம் முடிவடைவதற்கு சில நாட்களிற்கு முன்னர் கொழும்பு ஹோட்டலில் தங்கியிருந்த என்னை விடுதலைப்புலிகள் தொடர்புகொண்டனர்.
விடுதலைப்புலிகள் யுத்தநிறுத்தத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். அவர்கள் அதற்காக என்னை தொடர்பு கொண்டனர். தான் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவை சேர்ந்தவர் என, என்னை தொடர்புகொண்ட நபர் தெரிவித்தார்.
அப்போது நான் கூறினேன், வெறுமனே யுத்த நிறுத்தம் மாத்திரம் போதுமானதல்ல, ஆயுதங்களை கைவிடவேண்டும், பொதுமக்களை விடுவிக்கவேண்டும் என அவரிடம் தெரிவித்தேன்.
அவர் எனது நிலைப்பாட்டை பிரபாகரனிடம் தெரிவித்த பின்னர், என்னை தொடர்புகொள்வதாக கூறினார். ஆனால் பின்னர் என்னை அவர் தொடர்பு கொள்ளவில்லை” என்றும் அகாசி தெரிவித்துள்ளார்.