பின்னோக்கிச் செல்ல முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்: மைத்திரி குறித்து ஹக்கீம் கிண்டல்

🕔 November 15, 2018
னாதிபதிக்கு துணிச்சல் இருந்தால், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தி, அதில் போட்டியிட்டு வெற்றிபெற்றுக் காட்டுங்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சவால் விடுத்தார்.

இன்று வியாழக்கிழமை கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நடைபெற்ற
ஐக்கிய தேசிய முன்னணியில் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த சவாலை முன்வைத்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றி ரவூப் ஹக்கீம் மேலும் கூறுகையில்;

“நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு முன்னர், உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையை ஜனாதிபதி பெற்றிருக்கலாம். ஆனால், சட்டத்துறையில் போதிய தெளிவில்லாத  சட்டத்தரணிகளின் பேச்சைக் கேட்டு நாடாளுமன்றத்தை அவரசரப்பட்டு கலைத்துவிட்டார். அவர் இப்போது பின்நோக்கிச் செல்லமுடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்.

மூன்றிலிரண்டு பெரும்பான்மையின்றி நாலரை வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்கமுடியாது. அப்படியிருந்தும் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பில் இன்னுமொரு வாய்ப்பு இருக்கிறது. அதாவது, ஜனவரி 08ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதாகும்.

மைத்திரிபால சிறிசேனவுக்கு துணிச்சல் இருந்தால், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தி அதில் போட்டியிட்டு வெற்றிபெற்றுக் காட்டுங்கள் என்று நான் சவால் விடுக்கிறேன். அதில் எங்களது பலத்தை நிரூபித்து, மக்கள் பலம் என்னவென்பதை நாங்கள் உங்களுக்கு காட்டுவோம்.

எனது 25 வருட அரசியல் வாழ்க்கையில் இன்று நாடாளுமன்றத்தில் மிகவும் கீழ்த்தரமான காட்சிகளைக் கண்டேன். தனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகம்கொடுக்கத் திராணியற்ற மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் குழப்பம் விளைவித்து, அடித்து ஆட்சியைப் பெறுமாறு தனது சகாக்களை ஏவிவிட்டு மெதுவாக நழுவிச் சென்றார்.

நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றும்போது, மக்களின் இறைமையை மதித்து பொதுத் தேர்தலை நடத்துமாறு கூறினார். நாங்கள் சொல்கின்றோம், மக்கள் இறைமையை பாதுகாக்க வேண்டுமானால் முதலில் நடத்த வேண்டியது ஜனாதிபதி தேர்தலாகும். பொதுத் தேர்தலுக்கு முன்னர், ஜனாதிபதி தேர்தலை நடத்தி மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். ஏனென்றால், நாட்டில் அரசியல் பிரச்சினையொன்றுக்கு வழியமைத்து, ஜனநாயகத்துக்கு விரோதமாக செயற்பட்ட காரணத்தினால் மெதமுலான மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இழந்துள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும் இலகுவாக காவுகொள்ளலாம் என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், எங்களின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உங்களிடம் பறிகொடுக்காமல் பாதுகாத்துக் கொள்ளமுடிந்தமைக்கு பெருமைப்படுகிறோம்.

இந்த நாட்டிலே 09 ஆண்டுகளாக நடைபெற்ற கொடூர ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கு மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆணையை பாதுகாத்துள்ளோம். ஜனநாயகத்துக்கு விரோதமான ஜனாதிபதியின் செயற்பாடுகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்பதையும் தெளிவாக சொல்லிக்கொள்கிறோம்” என்றார்.

(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்