புதிய அமைச்சரவையில் ரவி, ஆறுமுகன், டக்ளல் உள்ளிட்டோருக்கு பதவி

🕔 October 28, 2018

புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் ரவி கருணாநாயக்க, டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் மற்றும் வே. ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது.

இந்த நிலையில், தற்போது அரசியல் அடுத்த என்ன நடக்கும் என்பது குறித்து, சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா சில தகவல்களை வழங்கியுள்ளார். அவை;

1. அமைச்சரவை பட்டியலை இறுதி செய்வதில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பரபரப்பாக உள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரிடம், இது தொடர்பில் அடிக்கடி ஜனாதிபதி ஆலோசனைகள் பெற்றாலும் இறுதியாக ஜனாதிபதியே எந்தெந்த அமைச்சுக்களுக்கு யாரை நியமிப்பதென தீர்மானம் எடுப்பார்.

2. இன்று மாநாயக்க தேரர்களை சந்திக்கும் பிரதமர் மஹிந்த, பிற்பகல் கொழும்பு திரும்பியவுடன் ஜனாதிபதியிடம் கலந்து பேசி, புதிய அமைச்சரவை தொடர்பில் இறுதி பட்டியலை பார்வையிடுவார்.

3. ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.

4. முக்கியமான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பது, தோட்டத் தொழிலாளர் சம்பள பிரச்சினை என்பன இதில் அடக்கம். முதலாளிமார் சம்மேளனத்தினை நேரடியாக அழைத்து பேசவும் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

5. ஆறுமுகன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா, வே. ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன. அரவிந்த்குமார் மற்றும் மலையகத்தில் இருந்து அரசாங்கத்தில் இணையவுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு பிரதியமைச்சுப் பொறுப்பு வழங்கப்படவுள்ளது.

6. அலரி மாளிகையில் இருந்து ரணில் வெளியேற தீர்மானம். கொழும்பில் உள்ள ராஜதந்திரிகளிடம் தனது எதிர்காலத் திட்டம் குறித்து அவர் விபரித்துள்ளார்.

7. கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

8. பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டாபய ராஜபக்சவை நியமிக்க இன்னமும் தீர்மானிக்கவில்லை.

9. நிதியமைச்சின் செயலாளராக சிரேஷ்ட திறைசேரி அதிகாரி ஆர்ட்டிகலவை நியமிக்க முடிவு.

10. ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் போராட்டத்தை நாளை முதல் நடத்த ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.

11. ரவி கருணாநாயக்கவுக்கு நிதியமைச்சை வழங்குவதா வெளிவிவகார அமைச்சை வழங்குவதா என்பதில் இழுபறி. நிதித்துறை நிறுவகங்களை இணைத்து புதிய அமைச்சு ஒன்றை வழங்க உத்தேசம்.

12. ஜனாதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றவியல் பிரேரணை ஒன்றை கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இன்று கையொப்பங்கள் பெறப்படுகின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்