அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு ஜனாதிபதி சுற்றாடல் விருது: டொக்டர் ஜவாஹிர் தலைமையில் சாதனை

🕔 October 20, 2018

– மப்றூக் –

க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை –  இந்த வருடத்துக்கான ‘ஜனாதிபதி சுற்றாடல் விருதினை’ பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த விருதினை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பெற்றமை இதுவே முதல் தடவையாகும்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகராக டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் பொறுப்பேற்றதன் பின்னர், அந்த வைத்தியசாலை பல்வேறு மட்டங்களிலும் சிறப்பான அடைவுகளைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குக் கிடைத்துள்ள மேற்படி ஜனாதிபதி சுற்றாடல் விருதானது, அதன் அடைவுகளில் ஒரு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.

சுற்றாடலை பேணும் தொழிற்சாலைகள் மற்றும் சேவையாளர்களை கௌரவிக்கும் வகையில், ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கப்படுகிறது.

சுற்றாடல் அமைச்சு ஏற்பாடு செய்திருந்த இந்த வருடத்துக்கான மேற்படி விருது வழங்கும் விழா, நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது, நாட்டிலுள்ள பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் சேவையாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அந்த வகையில் ஐந்து வைத்தியசாலைகள் ஜனாதிபதி சுற்றாடல் விருதினைப் பெற்றுக் கொண்டன.

அதற்கிணங்க, அம்பாறை பொது வைத்தியசாலை தங்க விருதினையும், அக்கரைப்பற்று மற்றும் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைகள் வெண்கல விருகளையும் பெற்றுக் கொண்டன. வைத்தியசாலைகளுக்கான வெள்ளி விருது இம்முறை வழங்கப்படவில்லை.

அதேவேளை, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை இதன்போது சிறப்பு விருதினைப் பெற்றுக் கொண்டது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி சுற்றாடல் விருதினை, அந்த வைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் பெற்றுக் கொண்டார்.

ஒட்டுமொத்தமாக, ஜனாதிபதி சுற்றாடல் விருதினைப் பெற்றுக் கொண்ட 05 வைத்தியசாலைகளில், நான்கு வைத்தியசாலைகள் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவை என்பது சிறப்பம்சமாகும்.

நீலப்பசுமை யுகமொன்றினை இலங்கையில் ஏற்படுத்துவதற்காக, மகாவலி அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘ஸ்ரீலங்கா நெக்ஸ்ற்’ செயற்திட்டத்தின் கீழ், இந்த விழா நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்