சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க, அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை: அமைச்சர் றிசாட் திட்டவட்டம்

🕔 October 18, 2018

மையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை என்று, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்கிடையில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே, இந்த விடயத்தை அமைச்சர் கூறினார்.

“உலக சந்தையில், பெற்றோலிய பொருட்களின் விலை மாறுபட்ட வகையில், அடிக்கடி அதிகரித்தாலும், எரிவாயு உட்பட நுகர்வுப் பொருட்களின் விலையை அதிகரிக்க அரசாங்கம் இடமளிக்கமாட்டாது” எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

“இந்த சந்தர்ப்பத்திலே உங்களது உதவியும் ஒத்துழைப்பும் எமக்கு மிகவும் முக்கியமானது. நுகர்வோரை பாதுகாப்பதற்கே நாம் முன்னுரிமை வழங்குகின்றோம்” என்றும், லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் பிரதிநிதிகளிடம் அமைச்சர் ரிஷாட் கூறினார்.

“போக்குவரத்துச் செலவு உட்பட இதர செலவுகள் அதிகரித்துவிட்டன. சமையல் எரிபொருட்களின் விலைச்சூத்திரத்துக்கு, இரண்டு தரப்பினரும் ஏற்கனவே இணங்கியிருந்த போதும், போக்குவரத்து மற்றும் இதர செலவுகள் காலத்துக்கு காலம் அதிகரித்து வருவதனால், சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பை மீளாய்வு செய்யுங்கள்” என்று அமைச்சர்களிடம், லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.

“2007 ஆம் ஆண்டு தொடக்கம், டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால், சமையல் எரிவாயுவைக் கொண்டு செல்லும் போக்குவரத்துச் செலவும் படிப்படியாக அதிகரித்து விட்டது. எனவே, லாபமீட்டலில் சரிவே காணப்படுகின்றது.

இந்த விலை அதிகரிப்பினால் தொழிற்சாலைகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டு, மூட வேண்டிய அபாயத்துக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. எனவே, சமையல் எரிவாயுவின் விலையை மீளாய்வு செய்யுங்கள்” என்று, அவர்கள் இந்த சந்திப்பின் போது வேண்டிக் கொண்டனர்.

“சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் தொடர்ந்தும் தமது சேவையை, நுகர்வோரை பாதிக்காத வகையில் மேற்கொள்ள வேண்டும். உலக சந்தையில், சர்வதேச மசகு எண்ணெயின் விலை உயர்வடைந்துள்ளதால், இலங்கையர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நுகர்வோரை மேலும் பாதிப்படையச் செய்யும் வகையில், சமையல் எரிவாயுவின் விலையை அதிகரித்தால், அது நுகர்வோரை மேலும் கஷ்டத்துக்கு உள்ளாக்கும்” என்று அமைச்சர் ரிஷாட் இதன்போது கூறினார்.

இதனையடுத்து, லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் பிரதிநிதிகள் விலைச்சூத்திரம் தொடர்பான முன்மொழிவொன்றை அமைச்சரிடம் கையளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவையின் உபகுழுவிடம் சமர்ப்பித்து, இது தொடர்பில் பரிசீலிப்போம் என உறுதியளித்தார்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்