தீபாவளிக்கு முன்னர் சம்பள உயர்வை பெற்றுத் தர வேண்டும்: தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

🕔 October 17, 2018

– க. கிஷாந்தன் –

பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள உயர்வு தொடர்பான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, அக்கரப்பத்தனை பெல்மோரல், கிரன்லி, பெரிய நாகவத்தை ஆகிய தோட்டங்களை சேர்ந்த 800ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டம் டயகம தலவாக்கலை பிரதான வீதியில் பசுமலை பெல்மோரல் சந்தியில் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோட்ட தொழிலாளர்கள் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து கோஷங்களை எழுப்பியவாறு, கறுப்பு கொடிகளை ஏந்தியும், சுலோகங்களை ஏந்தியிருந்தனர்.

இதன்போது  ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரும் சம்பள பேச்சுவார்த்தையில் தலையிட்டு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளமாக பெற்றுத்தர முன்வர வேண்டும் என, ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இதேவேளை “தோட்ட கம்பனிகளுக்கு அதிகமான வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் எங்களுக்கு, பிச்சை போடுவது போல 50 அல்லது 75 ரூபாய் வழங்குவது நியாயமற்ற செயலாகும்” எனவும் அவர்கள் கோஷமெழுப்பினர்.

கடந்த காலங்களிலும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது, தங்களை ஏமாற்றியதையும் அவர் சுட்டிக்காட்டினர்.

எனவே காலம் தாழ்த்தாமல், வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னர் சம்பள உயர்வை பெற்றுத்தர அனைத்து மலையக அரசியல்வாதிகளும் ஒன்றுப்பட வேண்டும் என்றும், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆதங்கத்துடன் கோரிக்கை விடுத்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்