சாய்ந்தமருதுக்கான நீர்வழங்கல் பிராந்திய காரியாலயம்: சில தெளிவுகள்

🕔 October 4, 2018

– வை எல் எஸ் ஹமீட் –

நீர்வழங்கல் பிராந்திய முகாமையாளர் அலுவலகம் ( Regional Manager’s Office)சில மாவட்டங்களில் ஒன்றும் சில மாவட்டங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவையும் இருக்கின்றன. அம்பாறையில் ஏற்கனவே இருந்த ஒன்று இரண்டாகி தற்போது மூன்றாகின்றன.

ஒரு பிராந்திய காரியலத்தின் கீழ் தேவையைப் பொறுத்து ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பிரதேச பொறியியலாளர் அலுவலகமுமோ (Area Engineer’s Office) அமையலாம்.

தற்போது அக்கறைப்பற்று பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தின்கீழ் இரண்டு பிரதேச பொறியியலாளர் காரியாலயங்கள் இயங்குகின்றன. ஒன்று அக்கரைப்பற்றிலும் அடுத்தது சாய்நதமருதிலுமாகும். இதற்கு மேலதிகமாக ஒவ்வொரு பிராந்திய அலுவலகத்தின் கீழும் ஒரு நடவடிக்கை மற்றும் பராமரிப்பு (Operation and Maintenance) அலுவலகமும் இயங்கும். அது தற்போது அக்கரைப்பற்றில் இயங்குகிறது.

சாய்ந்தமருது அலுவலகம்

தற்போதைய மூன்றாவது கல்முனைப் பிராந்திய அலுவலகம் சாய்ந்தமருதில் இயங்க இருக்கின்றது. இதன்கீழ் சாய்ந்தமருதில் ஒரு பிரதேச பொறியியலாளர் அலுவலகமும் ஒரு Operation and Maintenance அலுவலகமும் இயங்கும். மேலதிகமாக சம்மாந்துறையில் எதிர்காலத்தில் இன்னுமொரு பிரதேச பொறியியலாளர் அலுவலகம் திறக்கப்படலாம்.

இதன் சுருக்கம் அக்கறைப்பற்றில் தற்போது இயங்குகின்ற பிராந்திய முகாமையாளர் காரியாலயம், பிரதேச பொறியியலாளர் காரியாலயம் மற்றும் நடவடிக்கை மற்றும் பராமரிப்பு (Operation and Maintenance) Office வழமைபோன்று அங்கு தொடர்ந்தும் இயங்கும். இதன்மூலம் அக்கரைப்பற்றில் இயங்குகின்ற அலுவலகங்களுக்கு எதுவித பாதிப்பும் இல்லையென்பது தெளிவாகின்றது.

புதிய அலுவலகத்தின் அனுகூலங்கள்

தற்போது சம்மாந்துறைப் பிரதேசத்தில் சுமார் 17,000 இணைப்புகள் இருக்கின்றன. இவை அம்பாறை அலுவலகத்தின் கீழ் வருகின்றன. இவர்கள் தங்களுடைய தேவைகளுக்காக அம்பாறைக்குச் செல்லவேண்டி இருக்கின்றது. மொழிப்பிரச்சினை, தேவையற்ற தாமதம், குறிப்பாக ஒருவருடைய தண்ணீர் இணைப்புத் துண்டிக்கப்பட்டால் மீளிணைப்புக்காக அம்பாறைப் பிராந்திய அலுவலகத்திற்கு செல்லவேண்டிய நிலை உள்ளது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, சமுர்த்தி பெறுநருக்கான சலுகைக்கட்டண இணைப்பு பிரதேச பொறியியலாளரால் அங்கீகரிக்கப்பட வேண்டியுள்ளதால் அது அம்பாறைக்கு அனுப்பப்பட்டு தேவையற்ற தாமதங்களால் பலவித அசௌகரியங்களுக்கு அவ் ஏழைகள் முகம்கொடுக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக, வருட இறுதி நெருங்கும்போது அவ்வாறு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் தாமதத்தின் காராணமாக அடுத்த ஆண்டை அடைந்துவிட்டால் புதிதாக சமுர்த்தி பெறுவதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டிய தேவை ஏற்படுவதனால் வீணான சிரமமும் காலதாமதமும் ஏற்படுகின்றது.

இவ்வலுவலகம் அருகே அமைவதால் பல அசௌகரியங்கள் தவிர்க்கப்படுவதோடு, வருட இறுதிப்பகுதியில் ஏற்படுகின்ற தேவையற்ற தாமதம், மற்றும் சிரமங்கள் நம்மவர்களுடன் பேசி புரிந்துணர்வு அடிப்படையில் தவிர்க்கப்படக்கூடிய வாய்ப்பு சமுர்த்தி பெறுநர் போன்ற ஏழைகளுக்கு இருக்கின்றது.

மட்டுமல்லாமல் எங்காவது பழுதுகள் ஏற்பட்டால் கையாள்வதில் தூரத்தே உள்ள அலுவலகத்தைவிட, அதிக பாவனையாளர்களால் வேலைப்பழு கூடிய அலுவலகத்தைவிட அருகேயுள்ள வேலைப்பழுக்குறைந்த அலுவலகத்தால் கையாள்வது இலகுவானதும் துரிதப்படுத்தப்படக் கூடியதுமாகும்.

உத்தியோகத்தர்க்கான அனுகூலம்

சாதாரணமாக உத்தியோகத்தர்கள் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் இடமாற்றம் பெறுவதுண்டு. அருகே அலுவலகங்கள் அதிகரிக்கும்போது வெளிப்பிரதே இடமாற்றங்கள் குறையவும் அதன்மூலம் அவர்களது சிறார்களின் கல்வி முதற்கொண்டு எத்தனையோ வகையான சிரமங்கள் தவிர்க்கப்பட வாய்ப்புண்டு. அதேநேரம் இன்னும் சிலருக்கு தொழில் வாய்ப்புகளும் கிடைக்கும்.

சுருங்கக்கூறின் மேலதிக அலுவலகத்தால் ஏற்கனவே இருக்கின்ற அலுவலகத்திற்கு எதுவித பாதிப்புமில்லாதபோது, அடுத்தவர்களின் நன்மைக்காக புதிதாக உருவாக்கப்படுகின்ற அலுவலகத்தை எதிர்ப்பது எந்தவகையில் நியாயம் என நாம் சிந்திக்க வேண்டும்.

ஒரு ஊருக்கு தீமைசெய்து இன்னொரு ஊரோ, பிரதேசமோ நன்மையடைவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் எந்த ஊருக்கும் பாதிப்பில்லாமல் கிடைத்தால்  நன்மையே என்கின்ற ஒரு விடயத்தை எதற்காக நாம் எதிர்க்க வேண்டும் என்பதை அன்புக்குரிய சகோதர்கள் சிந்திக்க வேண்டும்.

வீண்வாதம்

மூன்று அலுவலகங்கள் வருவதால் பின்னர் அவற்றை மூடிவிட்டு எல்லாவற்றையும் அம்பாறைக்குக் கொண்டுபோய் விடுவார்கள் என்று கற்பனையில் ஒரு வாதம் முன்வைக்கப்படுகின்றது. அதேநேரம் சம்மாந்துறையில் பிரதி பொது முகாமையளார் (DGM) அலுவலகத்தைக் கொண்டு போகத்தான் இந்த முன்னெடுப்பு என்று அம்பாறையில் சிங்களத்தில் ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

இவ்வாறு முன்வைக்கப்படும் கற்பனாவாதங்களை எவ்வாறு பகுத்தறிவிற்குள் நிறுவுவது. கற்பனையில் பேசுவதானால் எல்லையில்லாமல் பேசலாம். ஏனெனில் அது கற்பனையாகும்.

எனவே, தமக்குப் பாதிப்பில்லாதபோது அடுத்த பிரதேசத்திற்கு கிடைக்கின்ற நன்மைகளை அரசியல் காரணங்களுக்காகவோ, அறியாமையினாலோ பிரதேசவாத உணர்வுகளைத் தூண்டி தடுக்க முற்படுவது முறையல்ல.

அடுத்த சமூகங்களில் ஜாதிவாதம் இருக்கின்றது. நம்மிடம் அது இல்லை. அதற்குப்பதிலாக பிரதேச வாதத்திற்குள் சிக்கித் தவிக்கிறோம். இனவாதமோ, பிரதேசவாதமோ – அவற்றுக்குப் பின்னால் இருப்பது இரு காரணிகள். ஒன்று- அரசியல். அடுத்தது- அறியாமை, புரியாமை. ஆனால் இதன்விளைவுகள் பாரதூரமானவை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்