முஸ்லிம் கூட்டமைப்பை ஏற்படுத்துவதில், தேசிய காங்கிரஸ் தலைமை காலங் கடத்த முடியாது: உதுமாலெப்பை

🕔 September 22, 2018

முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பினை ஏற்படுத்தும் முயற்சிகளில் அமைச்சர் ரிஷாதுடன் சேர முடியாது, அல்லது  வேறு முஸ்லிம் கட்சித் தலைவர்களுடன் ஒன்றிணைய இயலாது எனக் கூறிக்கொண்டு, தொடர்ந்தும் தேசிய காங்கிரஸ் தலைமை காலம் கடத்த முடியாது என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர்களான சுஐப் எம். காசிம் மற்றும் ஏ.ஜீ.எம். தௌபீக் ஆகியோருடன் இன்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற உரையாடல் ஒன்றின் போது, இதனை அவர் கூறினார்.

முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைக்கும் தனது நிலைப்பாடு தொடர்பில், தேசிய காங்கிரஸின் தலைமைக்கு அழுத்தம் கொடுக்கவே கட்சியின் பதவிகளை, தான் ராஜினாமாச் செய்ததாகவும் இதன்போது உதுமாலெப்பை சுட்டிக்காட்டினார்.

கொழும்பு புதுக்கடையில் வைத்து மேற்படி ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற உரையாடலின்போது, முன்னாள் அமைச்சர் மேலும் கருத்து கூறுகையில்;

“தேசிய காங்கிரசில் எனது பதவிகளை ராஜிநாமா செய்துள்ளேன். ஆனால் தொடர்ந்து தேசிய காங்கிரஸில் எனது பயணம் தொடரும். நாளை தலைவர் அதாவுல்லாவுடன் இடம்பெறவுள்ள சந்திப்பில் முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டமைப்பாக இணங்கிச் செல்ல வேண்டும் என்கிற எனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவேன்.

அம்பாறை மாவட்டத்தில் மூன்று முஸ்லிம் கட்சிகளும் சம பலத்தில் உள்ளன. இந்நிலையில் முஸ்லிம் கட்சிகள் பிரிந்து செயற்படுவது பேரினவாதத்தின் நில ஆக்கிரமிப்புக்கு வாய்ப்பாகிவிடும்.

எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள எந்தத் தேர்தலிலும் விழிப்பாகவும், விட்டுக் கொடுப்புடனும் முஸ்லிம் கட்சிகள் செயற்பட வேண்டும். பேரினவாதக் கட்சிகள் கூட்டாகச் செயற்படவுள்ளன. இப்பின்னணியில் முஸ்லிம் சமூகக் கட்சிகள் பிரிந்து செயற்படுவதன் ஆபத்தை என்னால் உணர முடிகின்றது.

இந்த ஆபத்தை தேசிய காங்கிரஸ் தலைமைக்கு உணர்த்தி வருகிறேன். நாளைய சந்திப்பிலும் உணர்த்துவேன். சமூகத்தை ஒற்றுமைப்படுத்தும் எனது முயற்சிகளுக்கு எனது கட்சித் தலைமையின் அங்கீகாரம் கிடைக்குமென நம்புகிறேன்.

முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பினை ஏற்படுத்தும் முயற்சிகளில் அமைச்சர் ரிஷாதுடன் சேர முடியாது, அல்லது  வேறு முஸ்லிம் கட்சித் தலைவர்களுடன் ஒன்றிணைய இயலாது எனத் தொடர்ந்தும் தேசிய காங்கிரஸ் தலைமை காலம் கடத்த முடியாது.

சமூக ஒற்றுமையை ஏற்படுத்தி, பேரினவாதம் மற்றுமு் கடும்போக்குவாதங்களை அடியோடு வீழ்த்தும் எனது வியூகம் வெற்றியளிக்கும் வரை, தேசிய காங்கிரஸின் தொண்டனாகவே உழைப்பேன்.

அக்கரைப்பற்றில் இடம் பெற்ற உங்கள் (சுஐப் எம். காசிம்) ‘வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்ற சவால்கள்’ எனும் புத்தக வெளியீட்டு விழாவில், இந்த மன நிலையுடன்தான் கலந்து கொண்டேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்