படைத் தளபதிகளை கைது செய்வதற்குப் பின்னால் யார் உள்ளனர்; விசாரணை நடைபெறுவதாக, அமைச்சர் சமரசிங்க தெரிவிப்பு
– அஷ்ரப் ஏ சமத் –
ஜனாதிபதிக்குத் தெரியாமல் நாட்டின் படைத் தளபதிகளை கைது செய்வதற்குப் பின்னால் உள்ளவா்கள் யார் எனக் கண்டறிவதற்காகவே, கடந்த வாரம் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்றினை ஜானதிபதி கூட்டியிருந்தார் என அமைச்சா் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.
ஸ்ரீ.ல..சு கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
“இந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி வகிக்கின்றார். அத்துடன் பிரதம மந்திரி மற்றும் ஜனாதிபதிக்கு அறிவிக்காமல் இந்த நாட்டின் சுதந்திரத்தினை பெற்றுக்கொடுத்த படைத்தளபதிகளை கைது செய்வது யார் என விசாரனை செய்யப்படுகின்றது. படைத்தளபதிகளை கைது செய்வது அல்லது விசாரணை செய்வதாயின் ஜனாதிபதியின்அனுமதி கட்டாயம் பெறப்படல் வேண்டும்.
யுத்த வெற்றிக்காக செயல்பட்ட படைத்தளபதிகளை கைது செய்து 05 அல்லது 11 மாதங்கள் சிறையில் அடைத்து வைத்துள்ளார்கள். அவா்கள் மீது எவ்வித வழக்குகளும் இல்லாமலேயே அவா்கள் கைது செய்யப்படுகின்றனா். அதுமட்டுமல்லாமல் படைத்தளபதிகள் அண்மையில் மெக்சிக்கோ நாட்டில் வைத்து கூட கைது செய்துள்ளனா். தளபதிகளை அவா்களது சீருடையில் வைத்து நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ள இருக்கையில் அமரச் செய்கின்றனா். இவற்றுக்கெல்லாம் பின் நிற்பவா்கள் யார் என்பதனை விசாரித்து ஜனாதிபதிக்கு அறிக்கை சமா்ப்பிக்கும்படி அவா் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2015 மார்ச் மாத்திலேயே ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கூட்டத்தின்போது; “இலங்கையில் நடைபெற்ற யுத்த விசாரணைக்காக, நான் ஓரு போதும் வெளிநாட்டு நீதிபதிகளையோ விசாரணை அதிகாரிகளையே இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டேன்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.
அத்துடன் இலங்கை நாட்டின் கொடூர பயங்கரவாதத்தினை தோற்கடித்த படைத்தளபதிகள் முப்படையினருக்கு எவ்வித கெடுதியும் நடைபெறாமல் அவா்களை பாதுகாப்பேன் எனவும் தெரிவித்திருந்தார்.
அண்மையில் பயங்கரவாத புலனாய்வு திணைக்களத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் குரல் பதிவை வெளியிட்டு நாலக்க என்பவர் ஊடக மாநட்டினை நடத்தினார். அதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வது பற்றி கலந்துரையாடப்பட்டமை விடயமாக விசாரனை நடைபெறுகின்றது. இவ் விடயம் பற்றி எமக்கு விசாரணை அறிக்கை கிடைத்ததும் அதனை வெளிப்படுத்துவோம். எமது நாட்டின் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைவரை பாதுகாப்பது அங்கத்தவா்களதும் இந்த நாட்டு மக்களதும் பொறுப்பாகும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றோர் இந்த நாட்டின் இறைமைக்கு எதிராகவே கருத்து வெளியிடுகின்றனர். அவா்கள் ஜக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பின் ஊடாக, இலங்கையில் நடைபெற்ற யுத்தம் பற்றி வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை செய்ய முயற்சிக்கின்றனர்.
மேலும் படைத் தளபதிகளை குற்றவாளிகளாக சித்தரிப்பதற்கே அவா்கள் விரும்புகின்றனர்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சனல் 4 போன்ற ஊடகங்களிடமும் இவ்வாறான கருத்துக்களையே அவர்கள் தெரிவிக்கின்றனர். இது புதுமையான விடயமல்ல” என்றார்.