புலிகளிடம் ஆயுதம் கொள்வனவு செய்தேனா: விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் ஹிஸ்புல்லா கோரிக்கை

🕔 August 31, 2018
விடுதலைப் புலிகளிடம் இருந்த ஆயுதங்களை கொள்வனவு செய்து முஸ்லிம் இளைஞர்களுக்கு வழங்கியதாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்த நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், இந்த விடயம் தொடர்பில் முறையான  தீவிர விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இக்குற்றச்சாட்டின் பின்னணியில் தேச விரோத, இனவாத சக்திகள் செயற்படுவதாகவும் இதனால் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அனுப்பி வைத்த கடிதத்திலேயே மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி 2018.08.18 ஆம் திகதி கொழும்பில் நடத்தியிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில், அதன் தலைவர் இன்பராசா கந்தசாமி முன்வைத்த கருத்துக்கள் எவ்வித ஆதாரமும் அற்ற, பாராதூரமான போலிக் குற்றச்சாட்டுகளாகும்.

விடுதலைப் புலிகளிடம் இருந்த 05 ஆயிரத்துக்கும் அதிகமான ஆயுதங்களை நானும் அமைச்சர் ரிஷாட் பதியூதீனும் பெற்று அதனை கிழக்கு மாகாணத்திலுள்ள மூதூர், கிண்ணியா, காத்தான்குடி உள்ளிட்ட முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள இளைஞர்களுக்கு வழங்கியதாக தெரிவித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டை நான்  முற்றாக நிராகரிப்பதோடு, ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் மேற்படி நபர் இவ்வாறான போலிக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்தமை தொடர்பில் தீர விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அத்துடன், அவ்வாறு ஆயுதங்கள் இருக்குமாயின் அது எங்குள்ளது? விற்பனை செய்யப்பட்டுள்ளதாயின் அது யாருக்கு? எப்போது? எவ்வாறு? விற்பனை செய்யப்பட்டுள்ளது போன்ற தகவல்களை குற்றம் சாட்டிய நபர் வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறான போலிக் குற்றச்சாட்டுக்கள் காரணமாக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்கள் எனது கௌரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், எனது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

இக்குற்றச்சாட்டின் பின்னணியில் தேச விரோத, இனவாத சக்திகள் செயற்படலாம். நாட்டின் அமைதியை சீர்குலைத்து சாதாரண மக்களை குழப்பி, நாட்டில் மீண்டுமொரு யுத்த சூழலை ஏற்படுத்துவதே குறித்த சக்திகளின் எதிர்பார்ப்பும் முயற்சியுமாகும்.

இதேவேளை, புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி முன்வைத்த போலிக் குற்றச்சாட்டினை  பெரிதுபடுத்தும் வகையில் தேசிய சுதந்திர முன்னணி, ராவண பலய, தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் மற்றும் சிங்கள ராவய போன்ற அமைப்புக்களும் – கட்சிகளும் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்புக்களினாலும் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

எனவே, இது சம்பந்தமாக சட்டம் ஒழுங்கு அமைச்சின் ஊடாக முறையான தீவிர விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும்.

அத்துடன், இவ்வாறு போலிக் குற்றச்சாட்டு முன்வைத்த தரப்பை தீர விசாரிப்பதோடு, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான இவ்வாறான பிரசாரங்களை செய்வதற்கு பின்னணியில் இருந்து செயற்பட்டவர்கள் யார் ? என்பது தொடர்பிலும் விசாரணை மேற்கொள்வது அத்தியவசியமாகும்.

இது தொடர்பில் மேற்கொள்ளும் விசாரணைக்கு எனது பூரண ஒத்துழைப்பினை வழங்குவேன்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்