சவால்கள் எனக்கு புதிய வியடமல்ல: உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு

🕔 August 23, 2018

– எம்.வை. அமீர்-

தென்கிழக்குப் பல்கலைக்கழக அபிவிருத்தியில் அக்கறை கொண்டதன் காரணமாகவே, உபவேந்தர் நியமனத்துக்காக பலர் முட்டி மோதியதாக, தான் கருதுவதாகவும் அவ்வாறு அவர்கள் உண்மையாகவே பல்கலைக்கழகத்தின் நலனில் அக்கறையுள்ளவர்களாக இருந்தால் தன்னுடன் இணைந்து செயற்பட முன்வருமாறும் அந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு நான்காவது உபவேந்தராக கடமைபுரிந்த பேராசிரியர் நாஜிம் ஐந்தாவது முறையாகவும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக தெரிவுசெய்யப்பட்டு பதவியேற்றிருந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வும் கல்விசார், நிருவாக மற்றும் கல்விசாரா ஊழியர்களுடனான சந்திப்பும் இன்று வியாழக்கிழமை அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் கேட்போர் கூடத்தில், பதில் பதிவாளர் ஏ. தையூப் தலைமையில் இடம்பெற்றது.

கலாநிதி றமீஸ் அபூபக்கரின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பேராசிரியர் நாஜீம்;

“எனது முதலாவது உபவேந்தர் காலப்பகுதியில் பல்கலைக்கழகத்தின் கல்விசார் விடயங்களிலும் ஏனைய விடயங்களிலும் நேர்மையாக செயற்பட முற்படுகையில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டேன். சவால்கள் தனக்குப் புதிய விடயமல்ல, தற்போது பதவியேற்றுள்ள இந்த காலப்பகுதியிலும் இன்னும் உத்வேகத்துடன் செயற்படுவேன்.

இதில் பல்கலைக்கழக சட்டக்கோவை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபங்கள் மற்றும் நிதிப்பிரமாணங்களுக்கு அமைவாகவே எனது செயற்பாடுகள் அமையும். இவற்றினை மீறி நான் எதனையும் செய்யப்போவத்தில்லை. சட்டம் மற்றும் சுற்றுநிருபங்களை மீறும் எதற்கும் நான் எப்போதும் துணை நிற்கப் போவதில்லை.

பல்கலைக்கழகத்தில் கடமைபுரியும் ஒவ்வொருவரும் அவரவவரின் கடமைகளை உளசுத்தியுடன் செய்வார்களானால் எவ்வித சிக்கலும் ஏற்படாது. சம்மந்தமில்லாத விடயங்களில் தங்களது மூக்கை நுளைப்போர் அவற்றிலிருந்து இருந்து தவிர்ந்துகொள்வது நல்லது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்