முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான வயதெல்லை: வர்த்தமானி அறிவித்தல் ரத்து

🕔 August 22, 2018

முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான வயதெல்லை 35 என வரையறுக்கப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவித்தன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலையீட்டால், மேற்படி வயதெல்லை தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போது, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியை செலுத்துவதற்கான குறைந்தபட்ச வயதெல்லை 35 என மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சரால் வர்த்தமானி மூலமாக வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் தொடர்பாக, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பலத்த எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த நிதி அமைச்சர் மங்கள சமரவீர; இவ்வாறான ஒழுங்குவிதிகள், தனிநபர் ஒருவரின் தொழில் உரிமையைப் பாதிக்கிறது என சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக இளைஞர்கள், தங்களுக்கு விருப்பமான தொழிலைத் தெரிவுசெய்வதற்கு, இவ்வாறான விதிகள் தடையாக அமைகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான ஒழுங்குவிதிகளை ஏற்படுத்துவதற்கு முன்பாக, முச்சக்கர வண்டிகளின் இறக்குமதி அளவைக் குறைப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அமைச்சர்கள் பலர் கருத்துத் தெரிவித்தனர்.

இந்த எதிர்ப்பையடுத்தே, மேற்படி வர்த்தமானி அறிவித்தல் ரத்துச் செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்