மிருகங்களுடன் மனிதர்கள் பாலியல் உறவு கொள்வதேன்?

🕔 August 2, 2018

ந்தியாவின் ஹரியானா மாநிலம் மேவார் பகுதியில் கருவுற்றிருந்த ஆட்டுடன் சில மனிதர்கள் பாலியல் உறவு கொண்டதும், அதையடுத்து அந்த ஆடு இறந்துபோனதாக தகவல் வெளியானது, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த ஜூலை 25ஆம் தேதியன்று நடந்த இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மேவார் காவல்துறை கண்காணிப்பாளர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறார்.

இந்திய தண்டனைச் சட்டம் 377 பிரிவு மற்றும் மிருகவதை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விவகாரம் போலீசாருக்கு தெரியவந்ததும், இறந்துபோன ஆடு உடற்கூறாய்வு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால் அந்த சோதனையில் குற்றச் செயல் உறுதிப்படுத்தப்படவில்லை.

உள்காயத்தினால் மரணம் நிகழ்ந்திருப்பதாக உடற்கூறாய்வு அறிக்கை கூறுகிறது. இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக காவல்துறை செய்தித்தொடர்பாளர் பி.ஆர்.ஜிதேந்திரா தெரிவித்தார்.

மிருகத்துடன் செக்ஸ்

விலங்குகளுடன் செக்ஸ் வைத்துக் கொள்வதை ஆங்கிலத்தில் பீஸ்டியாலிடி (Beastiality) என்று கூறுகின்றனர். மிருகத்துடன் புணர்ச்சி என்பது மிகவும் கொடூரமான நடத்தையாக கருதப்படுகிறது. ஆக்ஸ்போர்டு அகராதியின்படி, ஒரு மனிதனுக்கும் ஒரு மிருகத்திற்கும் இடையே பாலியல் உறவுக்கு பீஸ்டியாலிடி (Beastiality) என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

தேசிய பயோடெக்னாலஜி தகவல் மையத்தின் வலைதளத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது – ‘மனிதர்கள் விலங்குகளுடன் பாலியல் உறவு கொள்வது மிகவும் முக்கியமான பிரச்சினை, ஆனால் இது தொடர்பான வன்முறை வழக்குகள் பதிவு செய்யும் சதவிகிதம் மிகவும் குறைவாக உள்ளது. இது இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றமாகும்’.

தேசிய பயோடெக்னாலஜி தகவல் மையத்தின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆராய்ச்சியின்படி, பீஸ்டியாலிடி (Beastiality) என்பதும் ஒருவிதமான பாலியல் வன்கொடுமையே. பாலியல் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக விலங்குகளை பயன்படுத்துவது பாலியல் வன்முறை என்று கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற செயலின் நோக்கம் உடல் ரீதியான திருப்தி மட்டுமே, எந்தவிதமான உணர்ச்சித் தொடர்பும் இல்லை. இந்த ஆராய்ச்சியின்படி, சில சமுதாயங்களில், குறிப்பிட்ட சில பாலியல் நோய்களுக்கான சிகிச்சையாக பீஸ்டியாலிடி (Beastiality) கருதப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த பாலியல் துறை நிபுணர் மருத்துவர் வினோத் ரெய்னாவின் கூற்றுப்படி, மிருகங்களுடன் பாலியல்ரீதியாக உறவு கொள்பவர்கள் ‘சாடிஸ்ட்’ (கொடூர மனப்போக்கு கொண்டவர்கள்). இது முற்றிலும் மனம் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட விஷயம் என்கிறார் அவர்.

மிருகங்களை புணர்வதற்கான காரணம், பாலியல் ஏமாற்றம் (Sexual frustrations) மற்றும் பாலியல் கற்பனை (sexual fantasies) என இரண்டு வகைக்குள் அடங்கிவிடுவதாக சொல்கிறார் டொக்டர் ரெய்னா.

ஒரு ஆய்வறிக்கையின்படி, குழந்தைகளும் இதுபோன்ற செயல்களில் அதிகமான அளவில் ஈடுபடுகின்றனர். ஆனால் ஒரு குழந்தை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தால், அதனை அலட்சியப்படுத்தி விடக்கூடாது. இது மனச்சிதைவு போன்ற வேறுவிதமான பிரச்சனைகளுக்கு இட்டுச் செல்லலாம்.

இதுபோன்ற நடத்தைகள் எதிர்காலத்தில் மிகவும் ஆபத்தானதாக மாறலாம். பொதுவாக இதுபோன்ற விஷயங்களை புறக்கணிப்பதால், எதிர்காலத்தில் சமூகம் மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

“மனிதர்களின் வாழும் சூழலே பல நேரங்களில் இதுபோன்ற விஷயங்களுக்கு அடிப்படையாக இருக்கிறது. குடும்பங்களில், பாலியல் தொடர்பான விஷயங்களைப் பற்றி வெளிப்படையாக பேசுவதற்கு பல்வேறு தடைகள் இருக்கின்றன. பாலியல் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழ்நிலைகளும் பெரும்பாலும் அமைவதில்லை. இதுபோன்ற நேரங்களில் மனிதர்களின் பாலியல் உணர்வுகளுக்கு பலியாவது விலங்குகளே என்பது வருத்தத்திற்குரிய விஷயம்” என்று சொல்கிறார் டொக்டர் ரெய்னா,

இதுதான் முதல் சம்பவமா?

ஹரியானாவில் பதிவாகியிருப்பதுதான் மிருகங்களுடன் பாலியல் உறவு கொள்வது தொடர்பாக வெளியாகியிருக்கும் முதல் சம்பவமா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலே கிடைக்கிறது.

அமெரிக்காவில் வடகிழக்கு புளோரிடாவில் விலங்குகள் மீதான பாலியல் தாக்குதல்களில் அதிகம் இலக்கு வைக்கப்படுவது ஆடுகள் என்பது அதிர்ச்சியளிக்கிறது.

என்.சி.பியின் அறிக்கையிலும் இதேபோன்ற ஒரு வழக்கு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 18 வயது இளைஞன், தங்கள் வீட்டில் வளர்த்து வந்த மாடுகளுடன் பாலியல் உறவு கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதில் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு கன்றுகள் உயிரிழந்தன. அவற்றின் உடற்கூறாய்வு செய்யப்பட்டபோது, அவற்றின் சடலங்களில் மனிதனின் விந்தணுக்கள் இருந்தது தெரியவந்தது.

ஆனால் அந்த இளைஞனை கைது செய்து விசாரித்தபோது, அவனுக்கு எந்தவித குற்ற உணர்ச்சியுமே இல்லை என்பது அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது.

மிருகங்களை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்தியாவைத் தவிர, நெதர்லாந்து, பிரான்ஸ், டென்மார்க், சுவிட்சர்லாந்து போன்ற பல ஐரோப்பிய நாடுகளிலும் விலங்குகளுடன் பாலியல் உறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இதைத் தவிர, ஜெர்மனியிலும் விலங்குகளுடன் பாலியல் உறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில், இந்தக் குற்றத்திற்கான தண்டனையில் 2003 ஆம் ஆண்டில் மாற்றங்கள் செய்யப்பட்டது.

விலங்குகளுடன் பாலியல் உறவு கொள்ளும் குற்றத்திற்கு விதிக்கப்பட்டு வந்த ஆயுள் தண்டனை குறைக்கப்பட்டு, அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையாக மாற்றப்பட்டது.

ஆனால், ஹங்கேரி, பின்லாந்து போன்ற நாடுகளில் மிருகங்களை புணர்வது குற்றம் இல்லை. 2011இல் டென்மார்க் அரசு இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டது. அதன்படி, ’17 சதவிகித கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையளித்த விலங்குகள் குறைந்தது ஒரு முறையாவது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்’.

இது ஒருவிதமான மனநோயா?

சமநிலையற்ற வாழ்க்கை வாழ்பவர்கள் இத்தகைய தவறுகளில் அதிகம் ஈடுபடுவதாக என்.சி.பி அறிக்கை கூறுகிறது.

குழந்தைப் பருவத்தில் குடும்ப வன்முறை மற்றும் அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுவயதிலேயே பாலியல் வன்கொடுமைக்கு இலக்கானவர்களும் இதுபோன்ற நடத்தை சிக்கல்களுக்கு ஆளாகின்றனர்.

ஒழுங்கற்ற பாலியல் செயல்பாடுகள், பெரிஃபிலியோ (Paraphilia) என்று அறியப்படுவதாக உளவியலாளர் டொக்டர் பிரவீண் கூறுகிறார்.

“பெரிஃபிலியோ (Paraphilia) பலவகைப்படும். மிருகங்களுடன் புணர்வது (பீஸ்டியாலிடி (Beastiality)) என்பதும் அதில் ஒரு வகை. இது அசாதாரணமான நடத்தைக்கும் நோய்க்கும் இடையில் இருக்கும் ஒரு நிலை. வெறும் நடத்தை குறைபாடாக மட்டுமே இதை கருதமுடியாது.

நேக்ரோஃபீலியா (Necrophilia) என்பது பெரிஃபிலியோ (Paraphilia)வின் அடுத்த வகை. உயிரற்ற சடலங்களுடன் உடலுறவு கொள்வது இந்த வகையில் அடங்கும்” என்கிறார் டாக்டர் பிரவீண்.

இதற்கு காரணங்கள் என்ன?

• குழந்தை பருவத்தில் மோசமான அனுபவங்கள்

• தனிமை

• மனநோய்கள்

சிகிச்சை சாத்தியமா?

இந்த பிரச்சனைக்கு தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கூறும் மருத்துவர் பிரவீண், ஆனால் இன்றைய சூழலில் யாரும் அதற்கு தயாராக இல்லை என்று சொல்கிறார்.

இந்த சிகிச்சையில், நோயாளிக்கு அவர் ஒரு விலங்குடன் இருப்பதை ஆழ்மனதில் பதிய வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதில் ஒருபகுதியாக நோயாளியின் உடலில் மின்சாரம் பாய்ச்சி அதிர்ச்சி வைத்தியம் செய்யப்படுகிறது.

இது, இனிமேல் இதுபோன்ற தவறு செய்தால் மீண்டும் இதுபோன்ற சிகிச்சை அளிக்கப்படும் என்ற அச்சத்தை ஏற்படுத்தும். இப்படி ஆழ்மனதில் உணரப்படும் வலியும் அச்சமும் மீண்டும் தவறு செய்யத் தூண்டாது என்று பிரவீண் கூறுகிறார்.

ஆனால் தற்போது இது நடைமுறையில் இல்லை. “இதுபோன்ற தவறுகளை செய்பவர்களுக்கு பலவிதமான சிகிச்சைகள் இருந்தாலும், நிதர்சனத்தில் எதுவுமே போதுமான பலனளிப்பதாக இல்லை” என்று சொல்கிறார் மருத்துவர் பிரவீண்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கடுமையான, உரிய சிகிச்சை அளிப்பதே நன்மையளிக்கும் என்று அவர் கூறுகிறார்.

விலங்குகளுடன் பாலியல் உறவு கொள்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

• விலங்குடன் பாலியல் உறவில் விருப்பமில்லாதவர்கள், ஆனால், காம இச்சை தோன்றினால், வேறு வடிகால் கிடைக்காமல் விலங்குகளை நாடுகிறவர்கள்.

• விலங்குகள் மேல் இச்சை கொண்ட காதலர்கள் – இவர்கள் விலங்குகளை செல்லப்பிராணிகளாக வீட்டிலேயே வளர்ப்பார்கள். அவற்றுடன் பாலியல் ரீதியான உறவில் ஈடுபடவில்லை என்றாலும், மனதளவில் பாலியல் உணர்வோடு அணுகுவார்கள்.

• அசாதாரண கற்பனைத்திறன் கொண்டவர்கள்- விலங்குகளுடன் பாலியல் உறவு கொள்வது பற்றி தங்கள் கற்பனையில் எண்ணி இன்புறுவார்கள். ஆனால் அதை நிதர்சனத்தில் செயல்படுத்த மாட்டார்கள்.

• விலங்குகளிடம் காமம் கொண்டவர்கள்- இவர்கள் விலங்குகளை தொடுவார்கள், தழுவுவார்கள், காமக் கண்ணோட்டத்துடன் விலங்குகளின் உடல் பாகங்களையும், அந்தரங்க உறுப்புகளையும் தீண்டுவார்கள். ஆனால் இவர்கள் நேரடியாக பாலியல் உறவில் ஈடுபடுவதில்லை.

• அதிக காம உணர்ச்சி கொண்டவர்கள் – இவர்கள் விலங்குகளின் ஒவ்வொரு உறுப்பையும் கூர்ந்து கவனிப்பார்கள். பல சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு, காமக் கண்ணோட்டத்துடன் அணுகுவார்கள். விலங்குகள் புணர்வதை பார்க்கும்போது, இவர்களும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பாலியல் ரீதியான உத்வேகத்தை அடைவார்கள்.

• குரூரமான காமம் -விலங்குகளை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்பவர்களை இந்த வகையில் கொண்டுவரலாம். விலங்குகளுக்கு கடுமையான வலியை ஏற்படுத்தும் அளவுக்கு கொடுமை செய்வார்கள்.

• சந்தர்ப்பவாதி – பாலியல் உறவுகளில் இயல்பாகவே இருப்பார்கள். ஆனால் வாய்ப்பு கிடைத்தால், விலங்குகளுடன் உறவு கொள்வார்கள்.

• எப்போதுமே விலங்குடன் மட்டுமே உறவு கொள்பவர்கள் – இவர்கள் மனிதர்களுடன் உடலுறவு கொள்வதைவிட விலங்குகளுடன் உறவு கொள்வதையே அதிகம் விரும்புகின்றனர்.

• வன்முறை – இந்த வகையில் வருபவர்கள், விலங்குகளுடன் உறவு கொள்ளும்போது அவற்றை கொன்றுவிடுவார்கள். விலங்குகள் இறந்துவிட்டாலும், அவற்றுடன் உறவு கொள்வார்கள்.

• பிரத்யேக விலங்கு காதலன் – இந்த வகையை சேர்ந்தவர்கள் விலங்குகளுடன் மட்டுமே பாலியல் ரீதியாக உறவு வைத்துக் கொள்வார்கள்.

நன்றி: பிபிசி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்