சித்திலெப்பை ஆய்வுப் பேரவையின் தேசிய ஆய்வு மாநாடு, நாளை கொழும்பில்

🕔 July 21, 2018

‘முஸ்லிம் தேசியமும் சகவாழ்வும்’ எனும் தொனிப்பொருளில், சித்தி லெப்பை ஆய்வுப் பேரவையின் முதலாவது தேசிய ஆய்வு மாநாடு கொழும்பு – 06,  வெள்ளவத்தை, இலக்கம் 07, லில்லி அவெனியுவில் அமைந்துள்ள, சோனக இஸ்லாமிய கலாசார நிலைய மண்டபத்தில், நாளை ஞாயிற்றுக்கிழமை முழு நாள் நிகழ்வாக  இடம்பெறவுள்ளது.

முதலாவது ஆய்வரங்கு காலை 9 மணி முதல் 11 மணி வரை, அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் அரங்கில், ‘இலங்கை முஸ்லிம் தேசியத்தின் தந்தை அறிஞர் சித்தி லெப்பை’ எனும் மகுடத்தில்,  பேராசிரியர்களான எம்.எஸ்.எம். அனஸ், ரமீஸ் அப்துல்லாஹ் ஆகியோருடைய இணைத் தலைமையில் நடைபெறவுள்ளது.

இரண்டாவது ஆய்வரங்கு முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை, அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் அரங்கில், ‘நவ காலனித்துவ யுகத்தில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள்’ எனும் தலைப்பில், பேராசிரியர் சோ. சந்திரசேகரம் மற்றும் கலாநிதி பீ.ஏ. ஹுஸைன்மியா ஆகியோருடைய இணைத் தலைமையில் இடம்பெறவுள்ளது.

தேசிய ஆய்வு மாநாடு நிகழ்வுகள் மாலை 03 மணி முதல் இரவு 08 மணி வரை, அறிஞர் சித்தி லெப்பை அரங்கில் நிகழவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதன்போது வரவேற்புரையை – ஆய்வுப் பேரவையின் பொதுச் செயலாளர் பொறியியலாளர் நியாஸ் ஏ. ஸமத், தலைமையுரையை – பேரவையின் தலைவர் சட்டத்தரணி மர்சூம் மெளலானா, தொடக்கவுரையை – சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளர் டொக்டர் அஹமது ரிஷி ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.

கட்டார் பல்கலைக்கழகப் பேராசிரியர் தீன் முஹம்மத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விசேட உரை நிகழ்த்தவிருப்பதோடு, பேராசிரியர்களான எம்.ஏ. நுஃமான், சேமுமு முஹமதலி ஆகியோர் சிறப்புச் சொற்பொழிவுகளை ஆற்றவுள்ளனர்.

பேரவையின் உப தலைவர் “காப்பியக்கோ” ஜின்னாஹ் ஷரிபுத்தீன், மாநாட்டின் பிரகடனத்தை அறிமுகம் செய்து வைப்பார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்