பேரினவாதிகளின் அபாண்டங்களுக்கு எதிராக, அதே சமூகங்களைச் சேர்ந்தோர் செயற்படுவது மகிழ்ச்சிக்குரியது: அமைச்சர் றிசாட்

🕔 July 16, 2018

“வடக்குமுஸ்லிம்  மக்களின் மீள் குடியேற்றம் பற்றியும்  அவர்களின் பிரதிநிதியான என்னைப்பற்றியும் தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே பரப்பப்பட்டுவரும் அபாண்டங்களையும் பழிச்சொற்களையும் இல்லாமல் ஆக்குவதற்காக, அந்த சமூகங்களை சார்ந்த நமது கட்சியின் முக்கியஸ்தர்கள் யதார்த்தத்தை வெளிப்படுத்தி வருவது   இன உறவை மீண்டும் கட்டியெழுப்ப  செய்யும் நல்ல முயற்சியாகும்” என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா அல் அமான் விளையாட்டுக்கழகம் நடத்திய மூன்று நாள் கிரிக்கட் சுற்றுத்தொடரின் இறுதி நாள் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. அதில்  பிரதம அதிதியாக  கலந்து கொண்டு உரையாற்றியபோதே, அமைச்சர் இதனைக் கூறினார்.

அமைச்சர் மேலும் கூறுகையில்;

‘சுமார் ஏழு, எட்டு வருடங்களுக்கு முன்னர் சாளம்பைக்குளம், வாழவைத்தகுளம் மற்றும் இன்னோரன்ன வவுனியா மாவட்டத்தின் நமது பாரம்பரிய  பிரதேசங்களில் நமது சமூகம் மீளக் குடியேற வந்த போது கிளம்பிய எதிர்ப்புக்களை எண்ணிப்பார்க்கின்றோம். இந்த பிரதேசத்தின் வரலாறு தெரியாதஇ அதை அறியாத அப்பாவி இளைஞர்களிடம் பிழையான தகவல்களை வழங்கி, மீள் குடியேற்றத்தை தடுக்கும் வகையில் செயற்பட்டு என்னையும் மிக மோசமாக விமர்சித்து, கொடும்பாவி எரித்து, ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவங்கள் உங்களுக்கு தெரியும்.

பதவியையும் அதிகாரத்தையும் இறைவன் எமக்கு இலகுவாக தந்துவிடவில்லை. அகதி முகாமில் இருந்து கரடு முரடான பாதையில் பயணித்து நாம்பட்ட கஸ்டங்களுக்கு மத்தியில் மேற்கொண்ட முயற்சிகளினாலேயே இறைவன் இவ்வாறான அந்தஸ்தை தந்துள்ளான்.

சிங்கள மக்கள் மத்தியிலே எங்களை பிழையானவர்களாக சித்தரித்து,  இனவாதியாக காட்டும் முயற்சியில் இனவாத ஊடகங்கள் வரிந்துகட்டிக்கொண்டு நிற்கின்றன. அதே போன்று சிங்கள பேரினவாதிகளும் தமிழ் பேரினவாதிகளும் தினமும் என்னை நோக்கி சொல்லம்புகளை எய்துகொண்டு இருக்கின்றனர். இத்தனைக்கும் மேலாக ஒரு சில வருடங்களுக்கு முன்னர் இந்த பிரதேச மக்களின் வாக்குகளால் அதிகாரத்துக்கு வந்த  அரசியல் வாதி ஒருவர், தனது பதவியை பயன்படுத்தி மக்களுக்கு எவ்வாறு பணியாற்ற முடியும்  என்பதை விடுத்து, என்னை மட்டும்  எவ்வாறு அவமானப்படுத்த முடியும், கேவலப்படுத்த முடியும், எனது  திட்டங்களை எவ்வாறு தவிடு பொடியாக்க முடியும் என்பவை பற்றியே தனது சிந்தனையை செலுத்தி வருகின்றார்.

எனக்கெதிராக ஏற்கனவே களத்தில் கச்சை கட்டிக்கொண்டு நிற்கும் சில சிங்கள, தமிழ் இனவாத அரசியலாளர்களுடன் கைகோர்த்து, நண்பர்களாக கூட்டுச்சேர்ந்து எனக்கெதிரான நடவடிக்கைகளில் அண்மைக்காலமாக ஈடுபட்டு வருகிறார். நான் மேற்கொண்டுவரும் அபிவிருத்தி நவடிக்கைகளை எவ்வாறு தடுக்க முடியும் என்ற எண்ணமே அவரிடம் தொற்றி இருக்கின்றது.

நான் அரசியலுக்கு வந்த ஆரம்ப காலங்களில், அனைத்தையுமே இழந்து துன்பத்திலே உழன்று கிடந்த நமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் சில பணிகளை முன்னெடுத்தேன். எனினும் கடந்த கால யுத்தம் – வடக்கு, கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்களையும் மிகவும் மோசமாக வாட்டியிருந்தது. அவர்கள் வாழும் பிரதேசங்களுக்கு நாம் சென்ற போது, அவர்கள் படுகின்ற கஸ்டங்களை கண்கூடாக கண்டோம். எனவேதான் இந்த பிரதேசத்தில் வாழ்ந்து வரும் – தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் நமது  பணிகளை விஸ்தரித்தோம். எம்மால் முடிந்த வரை, நாம் மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் பணியாற்றி வருகின்றோம்.

வடக்கிலே வவுனியா, முல்லைத்தீவு, வெலி ஓயா, மாந்தை முருங்கன், தலைமன்னார், நானாட்டான், என்று நாம் பணிகளை முன்னெடுத்தோம்.

யுத்தம் முடிந்து  சுடுகாடாக காட்சி தந்த  முல்லைத்தீவை, வீதிக்கு வீதி தார்போட்டு, காபட் வீதிகளாக மாற்றினோம். யுத்தத்தால் உருக்குலைந்து போன முல்லைத்தீவு மாவட்டத்தில் இருபத்தி இரண்டாயிரம் வீடுகளை வழங்கி இருக்கின்றோம். பொது கட்டிடங்கள், பாடசாலைகள், தொழில் வாய்ப்புகள், மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்கி பணியாற்றியிருக்கின்றோம்.

வடமாகாண சபை உருவாகுவதற்கு முன்னரேயே கண்ணி வெடிகளுக்கும், குண்டு வெடிப்புகளுக்கு மத்தியிலே களத்தில் நின்று பணியாற்றியவர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்.

முஸ்லிம் பிரதேசங்களில் ஒருசில பாடசாலைகளே மாடிக்கட்டிங்களாக இருந்த அன்றைய நிலையை மாற்றி, இன்று அநேகமான பாடசாலைகளில் மாடிக்கட்டிங்களை கொண்டுவந்தவர்கள் எந்த அரசியல்வாதி  என்பதை நீங்கள் நன்கு சிந்தித்து பாருங்கள்.

‘அமைச்சர் றிஷாட் வன்னியை  விட்டு கிழக்குக்கு சென்றுவிட்டார் என வாய் கூசாமல் கூறுபவர்கள், தலைமன்னார் தொடக்கம் மறிச்சிக்கட்டி வரையும்;  முருங்கனில் இருந்து அரிப்பு வரையும் செய்த அபிவிருத்திகளை சற்று  சிந்தித்துப்பார்க்கட்டும்.

தனிப்பட்ட தேவைகள் நிறைவேறவில்லை என்பதற்காக எம்முடன் முரண்படுபவர்கள் பொது நலன் தொடர்பில் சிந்திப்பார்களேயானால் முரண்பாடுகளை தவிர்த்து  சமூகத்திற்காக ஒன்றிணைந்து பயணிக்க முன்வருவார்கள்” என்றார்.

இந்த நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் ஜயதிலக்க, இணைப்பு செயலாளர் முத்து முஹமட், நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி, லரீப், பிரதேசபை உறுப்பினர்களான ஜவாஹிர், ரஹீம், வவுனியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோன், வவுனியா மாவட்ட குவாஷி நீதிபதி மெளலவி அப்துல் மஜீத், மெளலவி தாஹிர் மற்றும் மெளலவி இர்சாத் உட்பட  கட்சி முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்