பசிலின் மனைவிக்கு நிதி வழங்கியதை, சீன நிறுவனம் ஏற்றுக் கொண்டது

🕔 July 13, 2018

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஸ்பா ராஜபக்ஷவின் அமைப்புக்கு, நிதியளித்தமையை கொழும்பு  இன்டநசனல் கொன்டய்னர் எனும் சீன துறைமுக நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சீன நிறுவனம் நிதியளித்ததாக நிவ்யோர்க் டைம்ஸ் குற்றச்சாட்டை சுமத்தியிருந்தது. எனினும் அதனை மஹிந்தவின் தரப்பு மறுத்து வந்தது.

இந்த நிலையில் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஸ்பா ராஜபக்ஷ நடத்திச் செல்லும் நிறுவனம் ஒன்றுக்கு 01 கோடியே 94 லட்சத்து 10 ஆயிரம் ரூபாவை அன்பளிப்பாக வழங்கியமையை மேற்படி சீன நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.

வறுமையில் உள்ளவர்களுக்காக வீடுகளை அமைத்துக் கொடுப்பது என்ற அடிப்படையிலேயே இந்த நிதி வழங்கப்பட்ட போதும், அந்த வீடுகள் தொடர்பில் தமது நிறுவனத்தினால் மேற்பார்வை செய்யப்படவில்லை என அந்த சீன நிறுவனம் கூறியுள்ளது.

இந்த அன்பளிப்பு தொடர்பில் முன்னதாக சீன நிறுவனம் தகவல்களை வழங்கியிருக்கவில்லை.

எனினும் சீன நிறுவனத்தினால் வழங்கப்பட்ட நிதிக்கான காசோலையின் பிரதியொன்றை, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டமையை அடுத்து, குறித்த சீன நிறுவனம் இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டுள்ளது.

தொடர்பான செய்தி: முன்னாள் அமைச்சர் பசிலின் மனைவிக்கு, சீன நிறுவனம் பணம் வழங்கியமை அம்பலம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்