முஸ்லிம்களை குற்றப்படுத்தி கூறப்படும் வில்பத்து பிரசாரம் பொய்யானதாகும்: வடக்கு பௌத்த மதகுருமார் தெரிவிப்பு

🕔 June 27, 2018

வில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு பரப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்கி, அவர்களுக்கு உண்மை நிலைகளை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை தொடங்குவதற்கென வடமாகாண பெளத்த மத குருமார்கள் அடங்கிய அமைப்பொன்றின் அவசியம் குறித்து, வடமாகாணத்தை சேர்ந்த பெளத்த மத குருமார்கள் கருத்து வெளியிட்டனர்.

வவுனியா ஸ்ரீபோதி தக்‌ஷினாராமய விகாரையில் அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், வட மாகாணத்தை சேர்ந்த பெளத்த தேரர்களை சந்தித்த போதே, தேரர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

இச்சந்திப்பின் போது வடமாகாண சங்கநாயக்க தேரர் கிரிஇப்பங்கவெவ ஸ்ரீ தர்மாராம விகாரதிபதி பொலநறுவ திலக்கலங்கார தேரர், ரணவர தம்மிந்த தேரர் மற்றும் மொனரா வைரப்பிய தேரர் ஆகியோரும் உடன் இருந்தனர்.

பொய்யான பிரசாரம்

“வில்பத்துவுக்கும் மன்னார் மாவட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சுமார் 25 வருடங்களுக்கு பின்னர், தாம் முன்னர் வாழ்ந்த முசலி பிரதேசத்துக்குச் சென்று குடியேறும் போதே, இவ்வாறான பிரச்சினை எழுந்தன.

மீள்குடியேறிய மக்களும் நானும் வில்பத்துவை அழிப்பதாக பிழையான பிரசாரங்களை தென்னிலங்கையில் உள்ள சில பெளத்த அமைப்புக்கள் முன்னெடுத்தன. இந்த பிரதேசத்தின் வரலாற்றை அறிந்திராத இந்த அமைப்புக்கள் தமக்கு கிடைத்த பிழையான தகவல்களின் அடிப்படையிலையே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்னெடுத்து தென்னிலங்கையில் சிங்கள மக்களிடம் பிரசாரங்களை மேற்கொண்டனர். இந்த விடயத்தில் என்னை ஒரு வேண்டாதவாராகவும், பிழையானவராகவும் ஆக்குவதற்கு இன்னும் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த குற்றச்சாட்டின் உண்மை நிலைமைகளை இந்த பிரதேசத்தில் வாழும் பெளத்த தேரர்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். எனவே சிங்கள மக்களிடமும், கண்டி அஸ்கிரிய மல்வத்த பீடாதிபதிகளிடமும் உண்மை நிலையை தெளிவுபடுத்துங்கள்” என்றும் அமைச்சர் வேண்டினார்.

வெளியிடப்படாத அறிக்கை

“முஸ்லிம்கள் வாழ்ந்த முசலியின் பல கிராமங்கள், ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன ரஷ்யாவில் இருந்தபோது, வனபரிபாலன திணைக்களத்துக்கு சொந்தமானது என வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது. இதனால் அங்கு தமது பூர்வீக காணிகளில் மீளக்குடியேறிய மக்கள் தமக்கு நடந்த அநீதிகளுக்கு நீதிகேட்டு 40 நாட்கள் வீதிகளில் கிடந்தனர்.

இதனையடுத்து அமைச்சர் பைசர் முஸ்தபா, நான் உட்பட முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் அந்த பிரதேச முக்கியஸ்தர்கள் பலர் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனவை சந்தித்து நிலைமைகளை எடுத்துரைத்தோம். இந்த விடயங்களை கேட்டறிந்த ஜனாதிபதி இதன் உண்மை நிலைமையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை நியமித்தார். களத்திற்கு சென்ற அந்தகுழுவினர் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரிடம் அறிக்கையையும் கையளித்துவிட்டனர். 06 மாத காலமாகியும் இன்னும் அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. இக்குழுவின் அறிக்கையை வெளிப்படுத்தி இது தொடர்பிலான உண்மை நிலையை வெளிப்படுத்துங்கள் என்று நாங்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பீடாதிபதிகளுக்கு விளக்கம்

சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் மல்வத்த அஸ்கிரிய பீடாதிபதிகளை நான் உட்பட அமைச்சர்கள் பலர் சந்தித்த போது, மல்வத்த மகாநாயக்க தேரர் என்னிடம் வில்பத்து விவகாரம் பற்றி வினவினார். நான் மதிப்புக்குரிய தேரரிடம் எங்களது நிலையை தெரிவித்தேன். அத்துடன் தங்களின் பிரதிநிதிகளையாவது இந்த பிரதேசத்திற்கு அனுப்பி உண்மை நிலையை அறிந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தேன்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட தேரர்கள் கருத்து தெரிவித்த போது,

“வடமாகாணத்தை பொறுத்தவரை எமக்கு உதவி செய்யும் அமைச்சர் நீங்கள் ஒருவர் மட்டுமே. முஸ்லிமாக தாங்கள் இருந்த போதும் எமது விகாரைகளை புனரமைப்புச் செய்து தந்தீர்கள். விகாரைகளுக்கான பாதைகளை அமைத்தீர்கள், இன்னும் பல்வேறு வழிகளிலும் உதவி இருக்கின்றீர்கள் – உதவுகின்றீர்கள்.

வில்பத்து பிரசாரம் பொய்

யுத்த காலத்தில் நாங்கள் மிகவும் பீதியுடன் இருந்த போது கெடுபிடிகளுக்கு மத்தியில் மிகவும் துணிச்சலாக இந்த பிரதேசத்துக்கு வந்து எங்களுக்கு உதவி செய்ததை நாங்கள் ஒருபோதும் மறக்கவில்லை.

வில்பத்துவின் உண்மை நிலையை அந்த பிரதேசத்துக்குச் சென்று நாங்கள் அறிந்து கொண்டோம். மக்களின் குடியுருப்புக்களை பார்வையிட்டோம். இந்த குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என்று நாங்கள் தெரிந்துகொண்டோம். அதனை வெளிப்படுத்தியதால் எங்களை சிலர் தூஷித்தார்கள்.

வில்பத்து விடயத்தையும் உங்களையும் சம்மந்தப்படுத்தும் தென்னிலங்கை தேரர்கள் இந்த விடயத்தை எங்களுடன் ஒரு போதும் பேசியதில்லை, கொழும்பிலே கூடி தீர்மானங்களை எடுக்கின்றனர், செய்மதி தொழில்நுட்பம் மூலம் இவர்கள் அந்த பிரதேசத்தை படம்பிடித்து தமக்கு ஏற்றாப்போல பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்” என்றும் தெரிவித்தனர்.

உண்மையை சொன்னோம்

மல்வத்து மகாநாயக்க தேரரை ஒருமுறை நாம் சந்தித்து பேசிய போது, எம்மிடம் வில்பத்து தொடர்பில் அவர் கேட்டார். நாம் உண்மைகளை தெரிவித்தோம். அந்தவேளையில் மகாநாயக்க தேரர்; “அமைச்சர் ரிசாத் முஸ்லிம்களுக்கு சேவை செய்கின்றார். அவர் தனது சமூகத்திற்கு ஆற்றும் பணிகள் போன்று சிங்கள அமைச்சர்கள் நமது மக்களுக்கு செய்வதில்லை என்றார்” என தேரர்கள் கூறினர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்