பதவியேற்பு நேரத்தில், காணாமல் போனார் ஹக்கீம்
– முன்ஸிப் –
மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், இன்று நடைபெற்ற அமைச்சரவைப் பதவியேற்பு நிகழ்வில், சுமார் 25 நிமிடங்கள் காலதாமதமாக வந்து, தனது பதவியினைப் பொறுப்பேற்றுக் கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றது.
புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுடைய பதவியேற்பு நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் தலைமையில் இந்த நிகழ்வு, இன்று பகல் 12.11 மணிக்கு ஆரம்பமாகி, தொடர்சியாக நடைபெற்றது.
இதன்போது, பகல் 01.16 மணிக்கு – நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சராகப் பதவியேற்றுக் கொள்ளுமாறு, மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் அழைக்கப்பட்டார். ஆயினும், அப்போது அவர் அங்கிருக்கவில்லை.
இன்று வெள்ளிக்கிழமை ‘ஜும்ஆ’ தினம் என்பதால், மு.கா. தலைவர் ஹக்கீம் பள்ளிவாசலுக்குச் சென்றிருந்தார்.
பின்னர், ‘ஜும்ஆ’ தொழுகையினை முடித்து விட்டு, ஜனாதிபதி செயலகத்துக்கு வருகை தந்த மு.கா. தலைவர் ஹக்கீம், பகல் 01.41 மணிக்கு அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.