புத்தாக்கமும், ஆய்வு நடவடிக்கைகளும் பொருளாதார அபிவிருத்தியில் பிரிக்க முடியாதவை: அமைச்சர் றிசாட்

🕔 June 23, 2018

புத்தாக்கமும், ஆய்வு நடவடிக்கைகளும் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் பிரிக்க முடியாத பகுதியாகுமென்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றும் வரும் ‘இன்கோ’ (INCO) கைத்தொழில் கண்காட்சியின் இரண்டாவது நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் மாகா இஞ்சினீரிங் (MAGA Engneering) நிறுவனத்தின் தலைவர் கெப்டன் எம்.டி. குலரட்ண கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டார்.

இன்கோ 2018 தலைவர் பொறியியலாளர் பி.எஸ். பெரேராவின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு அனுசரணையாளராக கைத்தொழில் வர்த்தக அமைச்சும், சமூக நலன்புரி மற்றும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சும் திகழ்கின்றது. 16வது தடவையாக இந்த நிகழ்வு மூன்று நாட்கள் இடம்பெறுகின்றன.

அமைச்சர் இங்கு உரையாற்றும் போது மேலும் கூறுகையில்;

“கைத்தொழிற்துறைக்கான கண்காட்சிக்கு முன்னோடியாக ‘இன்கோ’ கண்காட்சி கடந்த 15 வருட பயணத்தில் பிரமாண்டமான சேவைகளையும் இலங்கையின் கைத்தொழில் துறை அபிவிருத்தியில் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கின்றது.

இலங்கையில் முன்னணிக் கண்காட்சியாகவும் முதன்மைக் கண்காட்சியாகவும் போற்றப்படுகின்ற இந்தக் கண்காட்சி எதிர்காலத்தில் ஆசியாவிலேயே தரம் வாய்ந்த ஒரு நிகழ்வாக உருவெடுக்குமென நான் நம்புகின்றேன். கைத்தொழில் வர்த்தக அமைச்சு கடந்த காலங்களைப் போன்று தொடர்ச்சியான பங்களிப்பை நல்குமெனவும் உறுதியளிக்கின்றேன்.

இலங்கையில் இக்கண்காட்சி நடைபெறுவதன் மூலம் நேருக்கு நேரான வர்த்தகம் இடம்பெற உதவியளிக்கின்றது. அது மாத்திரமின்றி இலங்கையின் கைத்தொழில் துறையில் பரிசோதனைகள், புதிய ஆய்வுகள் மற்றும் கண்டு பிடிப்புக்கள் நவீன தொழில்நுட்பம், ஆகியவற்றை வளர்த்தெடுப்பதற்கும் இவ்வாறான கண்காட்சிகள் உதவுகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புதிய பொருளாதார அபிவிருத்தி நோக்கில் இளம் கண்டுபிடிப்புக்கள் மற்றும் ஆய்வுகளை ஊக்கப்படுத்தும் திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் நிலைக்கல்வி மட்டத்தில் புதிய கண்டுபிடிப்புக்களில் மாணவர்களுக்கு ஆர்வமூட்டி அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதன் மூலம் வெற்றிகரமான கண்டுபிடிப்புக்களை இந்த நாட்டில் அறிமுகப்படுத்துவதற்கு முடியுமென நாம் நம்புகின்றோம். இவ்வாறான அணுகுமுறைகளால் உலகளாவிய புத்தாக்க முயற்சிகளில் பின் தங்கியிருக்கும் எமது நாட்டவரை இந்ததுறையில் மேலும் முன்னேற்றுவதற்கு உதவுமென நம்புகின்றேன்.

இந்தவருடக் கண்காட்சியில் ஏழுவகையிலான இயந்திரவியல் கண்காட்சிப் பொருட்களை கண்காட்சியாளர்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். இதன் மூலம் அவர்களுடைய உற்பத்திகளும் சேவைகளும் ஊக்குவிக்க வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அடையாளம் காணப்பட்ட பொருத்தமான உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஒரே தளத்தில் சந்திப்பதற்கும் தொழில்சார் நடவடிக்கைகளை முன்னேற்றி அவர்களுடைய உற்பத்தி மற்றும் சேவைகளை விருத்தி செய்வதற்கும் உதவும்” என்றார்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்