மூத்த ஊடகவியலாளர் மக்கள் காதர் காலமானார்

🕔 June 10, 2018
– பாறுக் ஷிஹான்-

ன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும் எழுத்தாளரும் கலைஞருமான ‘மக்கள் காதர்’ என அழைக்கப்படும் எம்.ஏ. காதர் தனது 75 ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார்.

இவர்  நீண்ட நாட்களாக சுகவீனம் அடைந்திருந்தார்.

‘ஜனாசா’ நல்லடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் மூர் வீதியில் இடம் பெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மூர்வீதியை பிறப்பிடமாக கொண்ட இவரின் இயற் பெயர், மதார் முகைதீன் அப்துல் காதர் என்பதாகும்.

இவர் இன மத சமூக வேறுபாடுகளைக் களைந்து ஊடகத்துறையிலும், பொதுத் துறையிலும் தமிழ் மக்களோடு இணைந்து பணியாற்றினார்.

குறிப்பாக யுத்தம் கடுமையாக இடம்பெற்ற இறுதி தருனத்தின் போது, காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் அதிக கரிசனையுடன் பணியாற்றினார்.

மன்னாரைத் தளமாக கொண்டு இயங்கி வந்த தகவல் தொடர்பாடலுக்கான ஊடக வலைபின்னல் நிலையத்தின் சிரேஷ்ட ஆலோசகராகவும் இவர் பணியாற்றினார்.

அதேவேளை மன்னாரில் இருந்து மாதம் இருமுறை வெளி வந்த ‘காலச்சுவடுகள்’ பத்திரிகையின் இணை ஆசிரியராகவும் காதர் பணியாற்றினார்.

இவர் மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் ராயேப்பு ஜோசேப்பு ஆண்டகையின் பெரும் அன்பிற்கும், பாசத்திற்கும் பாத்திரமானவராவார்.

ஆயர் மற்றும் கத்தோலிக்க குருக்களின் மனித உரிமை பணிகளுக்கு பக்க பலமாக இருந்தார்.

சுமார் ஐம்பது ஆண்டுகால ஊடகத்துறைப் பணிக்காக முன்னாள் வட மாகாண ஆளுநர் சந்திரசிறி, இவருக்கு விருது வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்