காலித்தீன் மீதான தாக்குதலுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டனம்
– யூ.எல்.எம். றியாஸ் –
உயர்ந்த ஸ்தானத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவது ஊடக சுதந்திரத்தை நசுக்கும் செயலாகுமென அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகவியலாளர் யூ.கே. காலித்தீன் மீது சாய்ந்தமருதில் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தில் ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், சில தனிப்பட்ட நபர்களால் ஆங்காங்கே ஊடகவியலாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் ஊடகத் துறையினருக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திர ஊடகவியலாளர் யூ.கே. காலிதீன் நேர்மையான பக்கச்சார்பற்ற விதத்தில் செயற்படுபவர். இவர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் சம்பவமானது கண்டிக்கத்தக்கதாகும்.
இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் ஊடகவியலாளர் காலித்தீனை, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் தலைவர் எம்.ஏ. பகுறுத்தீன், பொருளாளர்யூ.எல்.எம். றியாஸ் மற்றும் பேரவையின் உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டனர்.