நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அர்ஜுன் அலோசியஸ் பணம் வழங்கினார், நான் வாங்கவில்லை: ரஞ்சன் ராமநாயக்க
பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் எனக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு பணம் வழங்கியிருந்தபோதிலும் அதனை தான் நிராகரித்துவிட்டேன் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அர்ஜுன் அலோசியஸ் பணம் வழங்க முயற்சித்தார் அதில் நானும் ஒருவன். எனினும் நான் அவரிடமிருந்து பணத்தை வாங்கவில்லை. நானும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், அனுரகுமார திசாநாயக்கவுமே அர்ஜுன் அலோசியஸிடமிருந்து பணம் வாங்காத இரண்டு எம்.பிக்கள்.
இதேவேளை, ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட 118 நபர்கள் பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் நிறுவனத்திடம் பணம் வாங்கியுள்ளதாக நம்பகத்தக்க தகவல்கள் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் அர்ஜுன் அலோசியஸிடமிருந்து முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர பெற்றுக்கொண்ட ஒரு மில்லியன் ரூபாவை திருப்பிக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அர்ஜுன் அலோசியஸ், தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.