எழுத்துச் சித்தர் பாலகுமாரன் காலமானார்

🕔 May 15, 2018

ழுத்துச் சித்தர் என்று கொண்டாடப்படும் எழுத்தாளர் பாலகுமாரன் (72 வயது) இன்று செவ்வாய்கிழமை காலமானார். நுரையீரல் நோய்த்தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

‘மெர்க்குரிப்பூக்கள்’ நாவல் மூலம் ஏராளமான வாசகர்களைக் ஈர்த்தவர் எழுத்தாளர் பாலகுமாரன். ‘தலையணைப்பூக்கள்’, ‘கரையோர முதலைகள்’, ‘பயணிகள் கவனிக்கவும்’, ‘இரும்பு குதிரைகள்’ என 274க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதிய பாலகுமாரன், எண்பதுகளில் மிகப்பெரிய உச்சத்தில் இருந்து தன் எழுத்துக்களால் வாசகர்களைக் கட்டிப்போட்டார்.

இவரின் வாசகர்களில் கணிசமானோர் இவரை ஒரு ஞானத்தந்தையாகவும், குருவாகவும் கொண்டாடினார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள பழமர்நேரி எனும் ஊரை சொந்த இடமாகக் கொண்ட பாலகுமாரன், சென்னையில்தான் படித்து வளர்ந்தார்.

டாஃபே நிறுவனத்தில் 17 வருடங்கள் இவர் பணியாற்றினார். எழுத்தின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக சினிமாவுக்குள்ளும் நுழைய நினைத்தார். அதன் பொருட்டு இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து பணியாற்றினார். ‘சிந்து பைரவி’, ‘புன்னகைமன்னன்’ முதலான படங்களில் பணிபுரிந்திருக்கிறார். இயக்குநர் கே.பாக்யராஜின் ‘இது நம்ம ஆளு’ படத்தை இயக்கினார்.

ஆரம்ப கட்டத்தில் ‘சாவி’ பத்திரிகையில் பணிபுரிந்தார். ஆடிப்பெருக்கு பற்றி இவர் எழுதிய கட்டுரையும் நடிகை ஷோபா மரணம் குறித்த கட்டுரையும் எல்லோராலும் பாராட்டப்பட்டது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ படத்தின் மூலம் வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்தார். அதையடுத்து ‘குணா’, ‘செண்பகத்தோட்டம்’, ‘மாதங்கள் ஏழு’, ‘கிழக்கு மலை’, ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’, ‘ஜீன்ஸ்’, ‘பாட்ஷா’, ‘முகவரி’, ‘சிட்டிசன்’ முதலான ஏராளமான படங்களுக்கு பாலகுமாரன் வசனம் எழுதினார்.

‘அன்பு. இதுவே என் கதையின் பிரதானம். இதுவே எல்லோருக்க்கும் தேவையாயும் போதுமானதாகவும் இருக்கிறது. இது இருந்தாலே, கிடைத்துவிட்டாலே சமூகம் அழகாகிவிடும். மனிதர்கள் நிம்மதியாய் வாழ்வார்கள்’ என்பதையே தொடர்ந்து தன் எழுத்துக்களிலும் நாவல்களிலும் பேட்டிகளிலும் வலியுறுத்தி வந்தார்.

ராஜராஜ சோழன் குறித்தும் தஞ்சை தேசம் குறித்தும் இவர் பல வருடங்களாக ஆய்வு செய்து எழுதிய ‘உடையார்’ எனும் மிகப்பிரமாண்டமான நாவல், வாசகர்களால் நல்ல வரவேற்பைப் பெற்றது.

நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்ட பாலகுமாரன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்